சினிமா

இந்திய திரைப்படங்கள் பாகிஸ்தானில் திரையிடப்படாது - பாக். மந்திரி தகவல்

புல்வாமா தாக்குதலுக்கு இந்தியா சார்பில் இன்று பதிலடி கொடுக்கப்பட்ட நிலையில், இந்திய திரைப்படங்கள் பாகிஸ்தானில் வெளியாகாது என்று பாகிஸ்தான் தகவல் தொடர்புத்துறை மந்திரி தெரிவித்துள்ளார். #IndianMoviesBannedinPakistan

இஸ்லாமாபாத்:

ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் கடந்த பிப்ரவரி 14-ஆம் தேதி பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பு நடத்திய, தற்கொலைத் தாக்குதலில் 40 துணை ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இதற்கு தக்க பதிலடி கொடுக்கப்பட வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரி வந்தனர். இந்த நிலையில், பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் முகாங்களை குறிவைத்து இந்திய விமானப்படை விமானங்கள் இன்று அதிகாலை தாக்குதல் நடத்தியது பாராட்டுக்களை பெற்று வருகிறது.

இந்த நிலையில், இந்திய திரைப்படங்களுக்கு பாகிஸ்தான் திரைப்பட விநியோகஸ்தர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதையடுத்து, இந்திய படங்கள் பாகிஸ்தானில் வெளியாகாது என்று பாகிஸ்தானின் தகவல் தொடர்புத்துறை மந்திரி சவுத்ரி ஃபவாத் ஹூசைன் தெரிவித்துள்ளார். இந்திய விளம்பரங்களை புறக்கணிக்கவும் பாகிஸ்தான் தொலைதொடர்புத்துறை அறிவுறுத்தியுள்ளது.

முன்னதாக பாகிஸ்தானுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கும் வகையில், அனைத்து இந்திய திரை தொழிலாளர் சங்கம், இந்திய திரையுலகில் பாகிஸ்தானைச் சேர்ந்த எந்த திரைப்பட கலைஞர்களும் பணியாற்ற முடியாது என்று தடை விதித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. #PulwamaAttack #IndianMoviesBannedinPakistan