சினிமா

அரசியல் உள்நோக்கத்தோடு சோதனை நடைபெற்றிருந்தால் அதனையும் சந்திக்க தயார் - விஷால்

நடிகர் விஷால் அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனையில், அரசியல் உள்நோக்கத்தோடு நடைபெற்றிருந்தால் அதனையும் சந்திக்க தயார் என்று விஷால் கூறியிருக்கிறார்.

மாலை மலர்

நடிகர் சங்க செயலாளரும், தயாரிப்பாளர் சங்கத் தலைவருமான விஷால், விஷால் பிலிம் பேக்டரி என்ற தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகிறார். இந்நிறுவனத்தில் இன்று சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையை ஜி.எஸ்.டி. நுண்ணறிவு பிரிவினர் சோதனை நடத்தினார்கள் என்றும், சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக சோதனை நடத்தப்பட்டதாகவும் தகவல் வெளியானது.

ஆனால், விஷாலின் தயாரிப்பு நிறுவனத்தில் ஜி.எஸ்.டி. நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தியதாக வந்த தகவல் தவறானது என்று உயரதிகாரி குறிப்பிட்டனர்.

வருமான வரி அதிகாரிகள் சோதனை நடத்தப்பட்டதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இந்த சோதனை நடத்தப்பட்டதற்கு விஷால் கூறும்போது, ‘நேர்மையாக வரிகளை செலுத்தி வருவதால் எனக்கு எவ்வித அச்சமும் இல்லை. அலுவலகத்தில் அதிகாரிகளின் சோதனையில் அரசியல் உள்நோக்கம் இருந்தால், அதனையும் சந்திக்க தயார் என்று கூறியுள்ளார்.

மேலும், இணையதளத்தில் திருட்டுத்தனமாக படங்களை யாரும் பார்க்க வேண்டாம். தொடர்ந்து பைரஸிக்கு எதிராக போராடுவேன். என் முயற்சிகள் தொடரும். நெல்லையில் தீக்குளித்து உயிரிழந்தவர்கள் குடும்பத்தின் நிலைதான் தற்போதைக்கு முக்கியமானது’ என்றும் கூறியுள்ளார்.