சினிமா

40 ஆண்டுகளாக நான் ரஜினி ரசிகன் - கபாலி செல்வா

ஜியோஸ்டார் நிறுவனம் சார்பில் கோட்டீஸ்வர ராஜு தயாரிப்பில் உருவாகி இருக்கும் ‘12.12.1950’ படம் குறித்து பேசிய கபாலி செல்வா தான் 40 ஆண்டுகளாக நான் ரஜினி ரசிகன் என்று கூறியிருக்கிறார்.

மாலை மலர்

ஜியோஸ்டார் நிறுவனம் சார்பில் கோட்டீஸ்வர ராஜு தயாரித்துள்ள படம் ‘12.12.1950’. இது ரஜினியின் ரசிகர் பற்றிய படம். கபாலி செல்வா எழுதி இயக்கி ரஜினி ரசிகராக நடித்திருக்கும் இந்த படம் வருகிற 8-ம் தேதி வெளியாகிறது.

படம் பற்றி கூறிய கபாலி செல்வா...

என்னுடைய வாழ்வில் நடந்த சில உண்மை சம்பவங்களை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட கதை தான் இந்த படம். 40 ஆண்டுகளாக நான் ரஜினி ரசிகனாக இருந்து வருகிறேன் என்பதை சொல்லிக் கொள்ள பெருமைப்படுகிறேன். தம்பி ராமையா இதில் 9 விதமான கெட்-அப்பில் நடித்திருக்கிறார். எம்.எஸ் பாஸ்கர் வாங்கும் சம்பளத்தில் பாதி போதும் என சொல்லி எனக்காக நடித்தார். இந்த படத்தில் என் மகனும் ஒரு ரோலில் நடித்திருக்கிறான். நான் சொன்ன பட்ஜெட்டில் 20 சதவீதம் மிச்சப்படுத்தியது எனக்கு திருப்தியாக இருக்கிறது. திட்டமிட்டு படத்தை எடுத்தால் சினிமா துறை நன்றாக இருக்கும்.

இது பரோலில் வெளியே வந்து படம் பார்க்கும் ரசிகரை பற்றிய கதை.

ரஜினி சாரை முதன்முதலாக பார்த்தபோது எனக்கு பேச்சே வரவில்லை. அவர் என்னை அழைத்து கட்டிப்பிடித்து வாழ்த்தினார். அவர் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தால் நிச்சயம் நடிப்பேன். ரஜினி ரசிகர்களுக்காக மட்டும் இந்த படம் எடுக்கவில்லை. எல்லோரையும் கவரும் படமாக இது இருக்கும்” என்றார்.

நிகழ்ச்சியில் பிரஷாந்த், நடிகை அஸ்வினி, செல்வாவின் தந்தை வரதராஜன், தயாரிப்பாளர் கோட்டீஸ்வர ராஜு, ஜான்விஜய், ராம்தாஸ், அஜய்பிரசாத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.