கவுதம் மேனன் தற்போது `துருவ நட்சத்திரம்' படத்தில் பிசியாகி இருக்கிறார். அத்துடன் `எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தின் இறுதிகட்ட பணிகளையும் கவனித்து வருகிறார்.
இந்நிலையில், தனியார் வாரஇதழ் ஒன்றுக்கு கவுதம் மேனன் அளித்த பேட்டியொன்றில், அவரது அடுத்த படங்களின் திட்டம் குறித்த தகவல்களையும் தெரிவித்திருக்கிறார். அதில், அவரது அடுத்த படமான `ஒன்ராகா' குறித்து ஒன்லைன் கதையை தெரிவித்திருக்கிறார். அதில் 8 வருடங்களுக்கு பிறகு `விண்ணைத்தாண்டி வருவாயா' படத்தின் கார்த்திக் என்ன செய்கிறார் என்பதை மையப்படுத்தியே இந்த படம் நகரும் என்று கூறியிருக்கிறார். இதில் பிருத்விராஜ், புனித் ராஜ் குமார், அனுஷ்கா ஷெட்டி ஏற்கனவே ஒப்பந்தமாகியுள்ள நிலையில், தமிழில் சிம்பு மற்றும் தெலுங்கில் சாய் தரம் தேஜாவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக கூறப்படுகிறது.
இதுதவிர கவுதம் மேனன், அவரது இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்ற `காக்க காக்க', `வேட்டையாடு விளையாடு' படங்களின் இரண்டாம் பாகத்தை இயக்க திட்டமிட்டிருப்பதாக கூறியிருக்கிறார். மேலும் `என்னை அறிந்தால்' படத்தின் அடுத்த பாகத்தை இயக்குவது குறித்தும் யோசித்து வருவதாக தெரிவித்திருக்கிறார்.
மேலும் அவரது இயக்கத்தில் நீண்ட நாட்களாக கிடப்பில் போடப்பட்டு, தற்போது படப்பிடிப்பை முடித்திருக்கும் எனை நோக்கி பாயும் தோட்டா படம் குறித்து பேசுகையில், இது ஒரு ஸ்டைலிஷ் படம் என்றார். இதில் காதல், ஆக்ஷன், காதல் சண்டை, காதல் இணைப்பு என அனைத்தும் இருக்கும். ஒரு வித்தியாசமான, இதுவரை பார்க்காத தனுஷை இந்த படத்தில் பார்ப்பீர்கள். அதேநேரத்தில் எனக்கும் இது ஒரு புதிய அனுபவமாக இருந்தது. படத்தில் இருந்து இரண்டு பாடல்கள் வெளியாகி இருக்கும் நிலையில், அடுத்த பாடல் ஒலி மழையிலே என்னும் பாடல் விரைவில் வெளியாக இருப்பதாகவும், படத்தில் மொத்தம் 6 பாடல்கள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். #GauthamMenon