தாக்குதல் 
சினிமா

நடிகையின் மகனுக்கு அரிவாள் வெட்டு

தமிழ், தெலுங்கு சினிமா படங்களில் கவர்ச்சி நடிகையாக நடித்த மாயாவின் மகனை 8 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் வெட்டி உள்ளனர்.

மாலை மலர்

தமிழ், தெலுங்கு சினிமா படங்களில் கவர்ச்சி நடிகையாக நடித்தவர் நடிகை மாயா. இவரது மகன் விக்கி என்கிற விக்னேஷ்குமார்.

இவர் சென்னை, சாலிகிராமம் தசரதபுரம் 8-வது தெருவில் உள்ள பாட்டி வீட்டில் வசித்து வருகிறார். விக்னேஷ் மீது பல்வேறு அடிதடி வழக்குகள் உள்ளன.

இந்த நிலையில் நேற்று இரவு 11 மணி அளவில் விக்னேஷ் வீட்டிற்கு வந்த 8 பேர் கும்பல் அவரிடம் தகராறில் ஈடுபட்டனர்.

அப்போது திடீரென மறைத்து வைத்திருந்த கத்தி, அரிவாளால் விக்னேசை சரமாரியாக வெட்டிய கும்பல் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

இதில் பலத்த காயம் அடைந்த விக்னேசை மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அவருக்கு உடலில் 40 தையல்கள் போடப்பட்டு உள்ளது.

இதுகுறித்து விருகம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில் கடந்த வாரம் மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் கண்ணன் என்பவரை விக்னேஷ் தாக்கியுள்ளார்.

அதற்கு பழி தீர்க்கும் வகையில் கண்ணன், தனது நண்பர்களுடன் சேர்ந்து விக்னேசை வீடு புகுந்து  வெட்டி கொலை செய்ய முயன்றது தெரிய வந்துள்ளது.