தடையை மீறி படங்களை திரைக்கு கொண்டு வரும் தயாரிப்பாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவித்து உள்ளனர். இதனால் திரைக்கு வர தயாராக இருந்த பல படங்கள் தள்ளிவைக்கப்பட்டு உள்ளன. தயாரிப்பாளர்களுக்கும், டிஜிட்டல் சேவை அமைப்பினருக்கும் இடையே நடந்த சமரச பேச்சுவார்த்தைகள் தோல்வி அடைந்துள்ளன.
வேலை நிறுத்தம் தொடரும் என்று பட அதிபர்கள் அறிவித்து உள்ளனர். இதனால் திரையுலக பணிகள் முடங்கி உள்ளன. தியேட்டர் உரிமையாளர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. திரையரங்குகளில் கூட்டம் குறைந்துள்ளது. ஏற்கனவே திரைக்கு வந்து ஓடிக்கொண்டிருந்த ஜீவாவின் கலகலப்பு-2, ஜோதிகா நடித்துள்ள நாச்சியார், விமலின் மன்னர் வகையறா உள்ளிட்ட சில படங்களை தொடர்ந்து திரையிட்டு வருகிறார்கள்.
சில தியேட்டர்களில் பழைய படங்கள் மீண்டும் திரையிடப்பட்டன. ஒரு காட்சியில் 10 பேர், 15 பேர் மட்டுமே படம் பார்க்க வருவதாகவும் இதனால் பல திரையரங்குகளில் காலை, பகல் காட்சிகள் ரத்து செய்யப்படுவதாகவும் தியேட்டர் உரிமையாளர் ஒருவர் கூறினார். மேலும் சில தியேட்டர்களில் கூட்டம் இல்லாததால் 3 காட்சிகளும் ரத்து செய்யப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.