திரெளபதி படக்குழு 
சினிமா

நாடக காதல் - திரெளபதி விமர்சனம்

மோகன்.ஜி இயக்கத்தில் ரிச்சர்ட், ஷீலா ராஜ்குமார், கருணாஸ் நடிப்பில் வெளியாகி இருக்கும் திரெளபதி படத்தின் விமர்சனம்.

மாலை மலர்

ரிச்சர்ட் விழுப்புரம் அருகே இருக்கும் சேந்தமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர். இரட்டை கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு சிறைக்கு செல்கிறார். பின்னர் ஜாமினில் வெளியே வரும் ரிச்சர்டு, சென்னையில் தனது நண்பருடன் தங்குகிறார். ராயபுரத்தில் இருக்கும் பதிவாளர் அலுவலகத்தில் டீ விற்று வருகிறார். அங்கே திருமண பதிவு விஷயத்தில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதையும் போலி திருமணங்கள் நடத்தப்படுவதையும் கண்டுபிடிக்கிறார். 

இதற்கு அரசு அதிகாரியான பதிவாளரும் உடந்தை என்பதால் இந்த குற்றத்தை பொறி வைத்து பிடிக்க ரிச்சர்டு திட்டமிடுகிறார். இந்த சூழலில் போலி திருமணங்கள் செய்து வைக்கும் நபர்களை கொன்று அதன் வீடியோக்களை கமிஷனருக்கே அனுப்பி வைக்கிறார். இதையடுத்து ரிச்சர்ட் என்ன செய்தார்? அவர் மனைவி திரெளபதிக்கு என்ன ஆனது? திருமண மோசடிகளுக்கு அவர் தீர்வு கண்டாரா? என்பதே படத்தின் மீதிக்கதை. 

ரிச்சர்டுக்கு படத்தையே தாங்கும் கதாபாத்திரம். பொறுமை, ஆக்ரோஷம் இரண்டையும் காட்டும் கதாபாத்திரம். நடிப்பில் வித்தியாசம் காட்டுகிறார். அவரது மனைவியாக வரும் ஷீலா ராஜ்குமார் சிறப்பான நடிப்பு. சமூகத்துக்காக அவர் பேசும் வசனங்கள் கைதட்டல்கள் வாங்குகின்றன. சின்ன கதாபாத்திரத்தில் வந்தாலும் கருணாசுக்கு நிறைவான வேடம். மற்ற கதாபாத்திரங்களும் சிறப்பான பங்களிப்பை கொடுத்துள்ளார்கள். 

பொய்யான காதலை எதிர்க்கிறேன் என்று ஒட்டுமொத்த காதலர்களையும் காதலையும் கொச்சைப்படுத்தி இருக்கவேண்டாம். படம் முழுக்க லாஜிக் மீறல்களும் இருக்கின்றன. அதேபோல் பெற்றோர் சம்மதத்துடன் மட்டுமே திருமணங்கள் நடக்கவேண்டும் என்பது கற்காலத்துக்கே நம்மை அழைத்து செல்வதுடன் நகைப்புக்குரியதாகவும் இருக்கிறது. 

குறைகள் இருந்தாலும் திருமண மோசடிகளை விளக்கும் படமாக திரெளபதி அமைந்துள்ளது. விழிப்புணர்வு படமாக மோகன்.ஜி கொடுத்துள்ளார். ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் திறம்பட கையாண்டுள்ளார். 

மனோஜ் நாராயணனின் நேர்த்தியான ஒளிப்பதிவும், ஜூபினின் பின்னணி இசையும் படத்துக்கு பலம் சேர்க்கின்றன. 

மொத்தத்தில் ‘திரெளபதி’ பலம்.