நான் ‘சுந்தரபாண்டியன்’ படம் மூலம் இயக்குநர் ஆக அறிமுகமானபோது தென் மாவட்ட மக்கள் மட்டுமில்லாமல் ஒட்டு மொத்த தமிழ்நாடே என்னைநல்ல இயக்குநராக அங்கீகரித்து அடையாளம் தந்தது. ‘சத்ரியன்’ படத்துக்கும் அதே ஆதரவு தந்ததற்கு நன்றிகள் பல...
எனக்கு கிடைத்துக்கொண்டிருக்கும் பாராட்டுகளில் ஒரு முக்கியமான பாராட்டை தங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
சந்தர்ப்ப சூழ்நிலை தான் ஒருவரது குணாதிசயத்தை தீர்மானிக்கிறது. அப்படி சந்தர்ப்ப சூழ்நிலையால் ரவுடியாக இருந்து இப்போது திருந்தி தன் அடையாளங்களை மறைத்து வாழும் ஒரு நல்ல மனிதர் என்னைத்தொடர்பு கொண்டு ‘எங்களுடைய கதையையும், ரவுடியிசத்தில் இருந்து வெளியே வர நினைக்கும் ஒருவனது மனநிலையையும், அவனுக்கு இருக்கும் நெருக்கடிகளையும் அருமையாக உணர்வுபூர்வமாக காட்டியிருக்கிறீர்கள்’ என்று பாராட்டியது என் வாழ்நாளில் மறக்க முடியாதது. ‘ஒரு பெண் நினைத்தால் எப்படிப்பட்டவனையும் நல்ல வழிக்கு கொண்டு வரலாம்’ என்ற கதைக்கருவையும் தாய்மார்கள் பாராட்டி வருகிறார்கள்.