இவர்களில் முக்கியமானவர் நடிகர் திலீப்பின் மானேஜர் அப்புண்ணி ஆவார். திலீப் கைதுக்குப் பிறகு அவர் தலைமறைவாக இருந்தார். இந்த கடத்தல் தொடர்பாக அப்புண்ணிக்கு பல தகவல்கள் தெரியும் என்பதால் அவரை போலீசார் தேடி வந்தனர். மேலும் தனக்கு முன்ஜாமீன் கேட்டு அப்புண்ணி தாக்கல் செய்த மனுவும் ஐகோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது.
அப்போது நீதிபதிகள் அவரை விசாரணைக்குழு முன்பு உடனடியாக ஆஜராகும்படியும் உத்தரவிட்டனர். போலீசாரும் ஆலுவா போலீஸ் கிளப்பில் ஆஜர் ஆகுமாறு அப்புண்ணிக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதைத்தொடர்ந்து இன்று காலை அப்புண்ணி ஆலுவா போலீஸ் கிளப்பில் சரண் அடைந்தார்.
அப்புண்ணி வருவதை அறிந்து ஏராளமான பத்திரிகையாளர்கள் போலீஸ் கிளப் முன்பு குவிந்திருந்தனர். அவர்களிடம் அப்புண்ணி கூறும்போது நடிகை கடத்தல் சம்பவத்தில் எனது பங்கு எதுவும் இல்லை என்று தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து சரண் அடைந்த அப்புண்ணியிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். நடிகை கடத்தல் தொடர்பாகவும், அதில் திலீப்பின் பங்கு என்ன? அவர்களுடன் தொடர்புடையவர்கள் யார்? என்பது போன்ற பல்வேறு கேள்விகளை எழுப்பி அப்புண்ணியிடம் போலீசார் விசாரித்தனர்.
விசாரணைக்கு பிறகு அப்புண்ணி கைது செய்யப்படலாம் என தெரிகிறது.
நடிகை கடத்தல் வழக்கில் முக்கிய தடயமான அவரை ஆபாசமாக படம் பிடித்த செல்போன் இதுவரை கைப்பற்றப்படவில்லை. அதை கைப்பற்ற தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் சில முக்கிய ஆதாரங்களையும் போலீசார் திரட்டி வருகிறார்கள்.