மலையாள நடிகர் தியான் ஸ்ரீனிவாசன், நடிகை நவ்யா நாயரை நோக்கி நகைச்சுவையாகப் பேசியது தற்போது இணையத்தில் பெரும் பேசு பொருளாகியுள்ளது.
நடிகர் தியான் ஸ்ரீனிவாசன் தான் நடித்துள்ள விசிட்டர் பட புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வருகிறார். அப்படி சமீபத்தில் நடைபெற்ற புரமோஷன் நிகழ்ச்சியில் பேசிய தியான் ஸ்ரீனிவாசன்,
“நாங்கள் (நவ்யா நாயர்) நீண்ட காலத்திற்குப் பிறகு ஒரு படத்திற்காக இணைகிறோம். நவ்யாவுக்கு இப்போது திருமணமாகி ஒரு மகனும் இருக்கிறார். அப்படியிருந்தும், நான் முதலமைச்சராகப் பதவியேற்கும்போது, நவ்யா கண்ணீருடன் புடவை அணிந்து முதல் வரிசையில் அமர்ந்திருப்பார் என்று நம்புகிறேன்” எனப் பேசியிருந்தார்.
இவரது பேச்சைக் கேட்டு அங்கு நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரும் சிரித்தனர். தொடர்ந்து பேசிய நவ்யா நாயரும்,
“கவலைப்படாதே, தியான். நீ விரும்பியபடியே முதலமைச்சர் ஆகும்போது, நான் பச்சை நிற பார்டர் கொண்ட வெள்ளைச் சேலையையும் வைர மாலையையும் அணிந்து, கண்ணீருடன் முதல் வரிசையில் அமர்ந்து, வெற்றி முழக்கமிட்டு உன்னை உற்சாகப்படுத்துவேன். முதல் வரிசையில் எனக்கும் ஓர் இருக்கை ஏற்பாடு செய்ய மாட்டாயா?” என நகைச்சுவையாகப் பேசினார்.
தற்போது இந்த வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி பெரும் பேசுபொருளாகியுள்ளது.
தியான் பேச்சு கவனம் ஈர்த்தது ஏன்?
தமிழ்நாடு முதலமைச்சராக விஜய் பதவியேற்றப்போது, நடிகை த்ரிஷா விஜய்யின் பெற்றோர்களான எஸ்.ஏ. சந்திரசேகர் மற்றும் ஷோபாவுடன் முன் வரிசையில் அமர்ந்திருந்தார். விஜய் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டபோது அவர் உணர்ச்சிவசப்படுவது போன்ற வீடியோக்கள் எல்லாம் இணையத்தில் வைரலாகின.
இதனை வைத்து விஜய்யையும், நடிகை த்ரிஷாவையும் நடிகர் தியான் கிண்டல் செய்ததாக பேசப்பட்டு வருகிறது.