பரியேறும் பெருமாள் படம் மூலம் சாதிய ஏற்றத்தாழ்வுகள் இன்னும் ஒழியவில்லை என உறக்கச் சொல்லி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் மாரி செல்வராஜ்.
தொடர்ந்து 'கர்ணன்', 'மாமன்னன்', 'வாழை' உள்ளிட்ட படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை மாரி செல்வராஜ் பிடித்துவிட்டார்.
தற்போது தீபாவளி வெளியீடாக அக்டோபர் 17 அன்று அவர் இயக்கிய பைசன் படம் வெளியாக உள்ளது. 1900-களில் தென்மாவட்டங்களில் நிலவிய சாதிய மோதல்கள் மற்றும் தீண்டாமையின் பின்னணியில் கபடி வீரரின் கதையாக இப்படம் உருவாகி உள்ளது.
படத்தின் புரோமோஷன் பணிகளில் இருக்கும் மாரி செல்வராஜ் அண்மையில் கலந்துகொண்ட பத்திரிகையாளர் சந்திப்பில் "நீங்கள் அரசியலுக்கு வருவீர்களா" என்ற கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த மாரி செல்வராஜ், எனது வாழ்வில் கலைதான் எனக்கு பெரிய போதை. எப்போதும் பதற்றத்திலேயே இருப்பதால் மிக விரைவாக வேலை பார்க்கக்கூடிய ஆள் நான். நிறைய படங்கள் இயக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன்.
இன்னும், 15 கதைகளையாவது திரைப்படமாக உருவாக்கிவிட என விரும்புகிறேன். அதனால், அரசியலுக்கு வர மாட்டேன். ஆனால், இயக்குநர் பா. இரஞ்சித் வருவார்" என்று தெரிவித்தார்.