சினிமா செய்திகள்

ரஜினி படத்தை இயக்கும் மாரி செல்வராஜ்?.. அவரே சொன்ன அப்டேட்!

கர்ணன், வாழை படங்களை போல இதிலும் கிராமத்து வாழ்வியலை மாரி செல்வராஜ் படமாக்கியுள்ளார்.வாழை படம் வெளிவந்தபோது பெரிய கடிதமே அனுப்பினார்.

மாலை மலர்

பரியேறும் பெருமாள் படம் மூலம் சாதிய ஏற்றத்தாழ்வுகள் இன்னும் ஒழியவில்லை என உறக்கச் சொல்லி  அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் மாரி செல்வராஜ்.

தொடர்ந்து 'கர்ணன்', 'மாமன்னன்', 'வாழை' உள்ளிட்ட படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை மாரி செல்வராஜ் பிடித்துவிட்டார்.

தற்போது தீபாவளி வெளியீடாக அக்டோபர் 17 அன்று அவர் இயக்கிய பைசன் படம் வெளியாக உள்ளது. துருவ் விக்ரம், அனுபமா பரமேஷ்வரன் ஆகியோர் நடித்த இப்படத்தின் டிரெய்லர் அண்மையில் வெளியாகி கவனம் ஈர்த்து வருகிறது. கர்ணன், வாழை படங்களை போல இதிலும் கிராமத்து வாழ்வியலை மாரி செல்வராஜ் படமாக்கியுள்ளார்.

இந்நிலையில் அண்மையில் நேர்காணல் ஒன்றில் ரஜினிகாந்தை வைத்து படம் இயக்குவது குறித்து நெறியாளர் எழுப்பிய கேள்விக்கு மாரி செல்வராஜ் சுவாரஷ்யமான கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

பேட்டியில் அவர் பேசியதாவது, ரஜிகாந்த் சாருக்கு என்னை மிகவும் பிடிக்கும். எனது ஒவ்வொரு படம் வெளியாகும் போதும் என்னை அழைத்து பாராட்டுவார். பரியேறும் பெருமாள், கர்ணன் படங்கள் வெளியானபோது என்னை நேரில் அழைத்து பாராட்டினார்.

வாழை படம் வெளிவந்தபோது பெரிய கடிதமே அனுப்பினார். கதைகள் குறித்து நாங்கள் பேசியுள்ளோம். என்னிடம் கதைகள் இருக்கின்றன. அவரிடம் சிலவற்றை சொல்லியுள்ளேன். என் மீது நம்பிக்கை வைத்து, எனது நேர்மையை நம்பி அவர் வந்தால் அவருடன் இணைந்து பணியாற்ற தயாராக இருக்கிறேன்.

கதை என்பது ஹீரோவுக்கானது அல்ல. எனது கதையில் ரஜினியும் நடிக்கலாம், துருவ் விக்ரமும் நடிக்கலாம். ரஜினி வந்தால் அவருக்கு ஏற்றவாறு அதை மெருகேற்றுவேன்" என்று தெரிவித்தார்.