ஐதராபாத்தில் வசித்து வரும் டிஸ்கோ சாந்தி திடீரென ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து உள்ளார்.
1980, 90 கால கட்டங்களில் ஹீரோ, ஹீரோயின்களை விட ரசிகர்களின் பார்வையை தன் பக்கம் திருப்பி திரை உலகில் தனக்கென தனி இடத்தை பிடித்தவர் டிஸ்கோ சாந்தி.
சினிமா நடிப்பில் பிசியாக இருந்த போதே பிரபல தெலுங்கு நடிகர் ஸ்ரீஹரியை திருமணம் செய்து கொண்டு ஐதராபாத்தில் குடியேறினார். கணவர் ஸ்ரீஹரி திடீரென காலமான நிலையில் மகன்களுடன் ஐதராபாத்தில் வசித்து வரும் டிஸ்கோ சாந்தி திடீரென ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து உள்ளார்.
புகைப்படத்தை பார்த்த ரசிகர்களும், பொதுமக்களும் டிஸ்கோ சாந்திக்கு என்ன ஆச்சு? என அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது குறித்து ஐதராபாத்தில் இருக்கும் டிஸ்கோ சாந்தியை மாலைமலர் நிருபர் தொடர்பு கொண்டு கேட்ட போது அவர் கூறியதாவது:-
என் அம்மாவின் நெருங்கிய தோழி சமீபத்தில் சென்னையில் காலமானார். இதற்காக விமானம் மூலம் காலை சென்னை வந்து விட்டு மாலையே ஐதராபாத் திரும்பிவிட்டேன். ஒரே நாளில் திரும்பியதால் அடுத்த நாள் கடுமையான உடல்வலி, கடும் காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டேன்.
ஆஸ்பத்திரியில் 10 நாட்களாக இருந்தேன். என்னால் அங்கு இருக்க முடியவில்லை. வீட்டில் நர்சை வைத்து பார்த்து கொள்கிறேன் என சொல்லி விட்டு நேற்று வீட்டிற்கு வந்து விட்டேன். இப்போது உடல்நலம் தேறி வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.