மலையாள இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கத்தில், 'ராக்கிங் ஸ்டார்' யஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘டாக்சிக்’. 1940 முதல் 1970 வரையிலான காலகட்டத்தில், கோவாவில் நிலவிய போதைப்பொருள் கடத்தல் மற்றும் மாஃபியா கும்பல்களை மையமாகக் கொண்ட ஆக்ஷன் த்ரில்லர் கதையாக இந்தப் படம் உருவாகியுள்ளது.
இந்தப் படத்தில் நயன்தாரா, கியாரா அத்வானி, ஹூமா குரேஷி, தாரா சுதாரியா, சுதேவ் நாயர், அக்ஷய் ஒபராய் மற்றும் ருக்மிணி வசந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இதனை படக்குழு ஏற்கனவே தனித்தனி போஸ்டர்களை வெளியிட்டு அறிவித்து இருந்தது.
இதனிடையே இந்தப் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
இதனை தொடர்ந்து ‘டாக்சிக்’ படம் மார்ச் மாதம் 19-ந்தேதி வெளியாகும் என முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால் மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்ட போர் பதற்றத்தால் ஜூன் 4-ந்தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இது ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் மேலும் ரசிர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக படம் வெளியீட்டு தேதி மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ‘டாக்சிக்’ படம் ஜூன் மாதம் வெளியாகாதது என்றும் விரைவில் வெளியீட்டு தேதி அறிவிக்கப்படும் என்றும் நடிகர் யஷ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,
நாம் உருவாக்கும் படங்கள் சில, ஆனால் சினிமா மீது நாம் ஏன் காதல் கொண்டோம் என்பதை நமக்கு நினைவூட்டும் படங்களும் சில. 'டாக்சிக்' அத்தகைய ஒரு பயணமாகவே அமைந்தது. சினிமா கான் மாநாட்டில் எங்கள் படத்தை வெளியிட்டதும், உலகளவில் கிடைத்த அமோகமான வரவேற்பைக் கண்டதும், இந்தப் படம் உலகெங்கிலும் அதன் முழுமையான ஆற்றலை அடையத் தகுதியானது என்ற எங்கள் நம்பிக்கையை மீண்டும் உறுதிப்படுத்தியது.
'டாக்சிக்' படம் நிறைவடைந்துவிட்டது, தற்போது நாங்கள் உலகளாவிய விநியோகம் மற்றும் கூட்டாண்மைகளை ஒருங்கிணைத்து வருகிறோம். இதன் காரணமாக, எங்கள் வெளியீட்டு கால அட்டவணையை மறுசீரமைக்க முடிவு செய்துள்ளோம். முன்னதாக அறிவித்தபடி ஜூன் மாதம் வெளியாகாதது என்றாலும், பின்னர் உலகளவில் ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு தேதியில் வெளியிடப்படும். 'டாக்சிக்' விரைவில் உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளுக்கு வரும்.
இந்திய சினிமா தனது குரலைக் கண்டறிந்து, மிகுந்த நம்பிக்கையுடன் உலக அரங்கில் அடியெடுத்து வைக்கும் இக்காலத்தில், தரத்தை உயர்த்துவது நம் ஒவ்வொருவரின் பொறுப்பாகும். ஒரு நடிகர்-தயாரிப்பாளராக, இந்தியத் திரையுலகிற்கும் நம் அனைவருக்கும் எனது பங்களிப்பைச் செய்வதற்கான ஒரு வாய்ப்பாக இந்தத் தருணத்தை நான் காண்கிறேன். நமது படம் உலகை அது ஏற்படுத்த வேண்டிய தாக்கத்துடன் சென்றடைவதை உறுதிசெய்ய நேரம் ஒதுக்குவதன் மூலம் இதைச் செய்ய வேண்டும். ஒவ்வொரு அடியிலும், ஒவ்வொரு மாற்றத்திலும் உங்கள் ஆதரவு என்னுடன் நிலைத்திருக்கிறது, அதை நான் நன்றியுணர்வுடன் போற்றுகிறேன். சில கதைகளுக்குப் பொறுமை தேவை. சில பயணங்களுக்கு அது அவசியமாகிறது. நீங்கள் ரசித்து மகிழக்கூடிய ஒரு திரைப்படத்தையும், இந்திய சினிமாவுக்கு ஒரு பெருமைக்குரிய தருணமாகத் திகழும் ஒரு திரைப்படத்தையும் உங்களுக்கு வழங்குவதாக நாங்கள் உறுதியளிக்கிறோம் என்று கூறியுள்ளார்.