சினிமா செய்திகள்

காஜல் அகர்வாலின் 'தி இந்தியா ஸ்டோரி': புதிய போஸ்டர் வெளியீடு!

"நாம் கஷ்டப்பட்டு உழைப்பதே தட்டில் இருக்கும் உணவுக்காகத்தான். அந்த உணவிலேயே விஷம் கலந்திருந்தால்'?

இயக்குநர் சேட்டன் டிகே இயக்கத்தில், நடிகை காஜல் அகர்வால் மற்றும் ஸ்ரேயாஸ் தல்படே முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ள 'தி இந்தியா ஸ்டோரி' திரைப்படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இத்திரைப்படம் ஜூலை 24-ம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இத்திரைப்படம் இந்தியாவில் மிக முக்கிய பொது சுகாதாரப் பிரச்சனையாக இருக்கும் 'உணவு கலப்படம்' மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளின் தவறான பயன்பாடு ஆகியவற்றின் பின்னணியை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. நாம் அன்றாடம் சாப்பிடும் உணவில் கலக்கப்படும் விஷம் எப்படி ஒரு நடுத்தரக் குடும்பத்தைப் பாதிக்கிறது என்பதை உணர்வுப்பூர்வமாகப் பேசுகிறது.

வழக்கறிஞராக காஜல் அகர்வால்:

நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகை காஜல் அகர்வால் இதில் 'அட்வகேட் அர்ச்சனா' என்ற வலிமையான பெண் வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கார்ப்பரேட் நிறுவனங்களின் முறைகேடுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் போராடும் ஒரு முக்கிய கதாபாத்திரமாக அவர் வலம் வரவுள்ளார்.

போஸ்டர் உணர்த்தும் கதைக்களம்:

தற்போது வெளியாகியுள்ள புதிய போஸ்டரில், கோபமான மக்கள் கூட்டத்திற்கு மத்தியில் ஸ்ரேயாஸ் தல்படே ஒரு நோய்வாய்ப்பட்ட குழந்தையைத் தூக்கிக்கொண்டு ஓடுவது போன்றும், பின்னணியில் பம்பாய் உயர் நீதிமன்றம் இருப்பது போன்றும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இது ஒரு தீவிரமான நீதிமன்றப் போராட்டத்தை ரசிகர்களுக்குக் கண்முன் நிறுத்துகிறது. எம்.ஐ.ஜி புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், ஜீ ஸ்டுடியோஸ் வழங்கும் இந்தத் திரைப்படத்தை 'சாகர் பி. ஷிண்டே' கதையை எழுதி தயாரித்துள்ளார்.

3 மொழிகளில் ரிலீஸ்:

பான்-இந்தியா திரைப்படமாக உருவாகியுள்ள 'தி இந்தியா ஸ்டோரி' தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மூன்று மொழிகளில் ஜூலை 24-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

இயக்குநர் சேட்டன் டிகே பேட்டி:

"நாம் கஷ்டப்பட்டு உழைப்பதே தட்டில் இருக்கும் உணவுக்காகத்தான். அந்த உணவிலேயே விஷம் கலந்திருந்தால் நமது ஒட்டுமொத்த உழைப்பும் வீண். இந்தத் திரைப்படம் பார்த்த பிறகு மக்கள் தங்களின் உணவுப் பாதுகாப்பு குறித்து நிச்சயம் தீவிரமாக யோசிப்பார்கள்" என்று படத்தின் இயக்குநர் அண்மையில் படத்தின் முக்கியத்துவம் குறித்துப் பேசியுள்ளார்.