சினிமா செய்திகள்

மாரிமுத்து மறைவு.. அமைச்சர் உதயநிதி இரங்கல்

நடிகர் மாரிமுத்து இன்று மாரடைப்பால் காலமானார்.இவரது உடலுக்கு பிரபலங்கள் பலர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

மாலை மலர்

'எதிர்நீச்சல்' என்ற சின்னத்திரை தொடர் மூலம் பெண்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் மாரிமுத்து. இவர் தொலைக்காட்சி தொடர் மட்டுமல்லாமல் 20-க்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும் நடித்துள்ளார். மேலும் இரண்டு படங்களையும் இயக்கியுள்ளார். இவர் சீமான், மணிரத்னம், வசந்த், எஸ்.ஜே. சூர்யா ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்துள்ளார். வைரமுத்துவிடமும் உதவியாளாராக இருந்துள்ளார்.

நடிகர் மாரிமுத்து (58) இன்று காலை 'எதிர்நீச்சல்' தொடரின் டப்பிங் பணியில் ஈடுப்பட்டிருந்த போது மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். இவர் மறைவு ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவரது உடலுக்கு திரைப்பிரபலங்கள் பலர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "திரைப்பட இயக்குநரும், நடிகருமான அண்ணன் மாரிமுத்து அவர்களின் மரணம் அதிர்ச்சியையும், மன வேதனையையும் தருகிறது. அவருடைய மறைவுக்கு என் ஆழ்ந்த இரங்கல். அவரை பிரிந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், திரையுலகினர் மற்றும் ரசிகர்களுக்கு என் ஆறுதலை தெரிவித்துக்கொள்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.