நடிகர் சூர்யா நடிப்பில், கூட்டத்தில் ஒருவன் பட இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் உருவாகி வெளியான திரைப்படம் ஜெய்பீம். இப்படத்தில் கர்ணன் பட நடிகை ரஜிஷா விஜயனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இருளர் பழங்குடியின மக்களின் வாழ்க்கை மற்றும் உரிமைகள் பற்றி பேசும் இப்படத்தில் நடிகர் சூர்யா, பழங்குடியின மக்களுக்காக வாதாடும் வழக்கறிஞர் வேடத்தில் நடித்திருந்தார்.
ஜெய்பீம்
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நேரடியாக ஓ.டி.டி.யில் வெளியான இப்படம் நல்ல விமர்சனங்களை பெற்று ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. இப்படம் பலரின் பாராட்டுக்களை பெற்றிருந்தாலும் குறிப்பிட்ட சமூகத்தைத் தவறாகச் சித்தரித்துள்ளதாகக் கூறி ஜெய் பீம் படக்குழு சில பிரச்சனைகளையும் சந்தித்தது. இருப்பினும் இப்படம் பல்வேறு சர்வதேச விருதுகளை வாங்கிக் குவித்துள்ளது.
ஜெய்பீம்
இந்நிலையில் 'ஜெய் பீம்' படம் வெளியாகி இன்றுடன் ஓராண்டு நிறைவடைகிறது. இதனைக் கொண்டாடும் விதமாகப் படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், இயக்குனர் ஞானவேல் 'ஜெய்பீம்' படத்தில் பணியாற்றிய அனுபவம் குறித்து பகிர்ந்துள்ளார்.
ஜெய்பீம்
தொடர்ந்து சூர்யா தனது சமூக வலைதளப் பக்கத்தில், "ஜெய் பீம் படம் ஓராண்டு நிறைவு செய்வதை கொண்டாடுவது மகிழ்ச்சியளிக்கிறது. திரைக்கதை முதல் இயக்கம் வரை இப்படம் வலுப்பெற்றுக் கொண்டேயிருந்தது. இந்த அர்த்தமுள்ள படத்தை கொடுத்த என் சகோதரர் ஞானவேல் மற்றும் படக்குழுவினருக்கு நன்றி. வழக்கறிஞர் சந்துரு கதாபாத்திரம் என் வாழ்வில் ஓர் மைல்கல்" என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.