எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ படத்திற்கு நீண்ட இழுபறிக்கு பிறகு தணிக்கை வாரியம் சான்றிதழ் அளித்துள்ளது. 183 நிமிடங்கள் (3 மணி நேரம் 3 நிமிடங்கள்) கொண்ட இந்த படத்துக்கு 'ஏ' சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதனால் வருகிற 24-ந்தேதி அன்று ‘ஜனநாயகன்’ படம் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.
‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு தணிக்கை சான்றிதழ் கிடைத்தது மகிழ்ச்சி அளித்தாலும், 'ஏ' சான்றிதழ் கிடைத்திருப்பதாக வெளியாகும் தகவல்கள் ரசிகர்களுக்கு சற்று அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. இதனால் படத்தின் வசூல் பாதிக்கலாம் என்றும் கூறப்படுகிறது. எனவே மீண்டும் தணிக்கை குழுவை படக்குழுவினர் நாடி பேச இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. எது எப்படியோ விஜய் படம் விரைவில் வெளியாக இருப்பது அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளித்திருக்கிறது.
இதனிடையே ‘ஜனநாயகன்’ படம் வருகிற 24-ந்தேதி வெளியாகும் என படக்குழு தரப்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாத பட்சத்தில், கோலிவுட்டில் வரும் வாரங்களில் வெளியாக உள்ள திரைப்படங்களின் ரிலீஸ் தேதிகளில் அதிரடி மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தியேட்டர் தட்டுப்பாடு மற்றும் வசூல் பாதிப்பை தவிர்க்கும் என்ற நோக்கில் பல படங்கள் பின்வாங்கி வருவதாக கூறப்படுகிறது. அது குறித்து பார்ப்போம்...
ஜூலை 23 அன்று திரையரங்குகளில் வெளியாகவிருந்த ஜி.வி. பிரகாஷின் 'இம்மார்டல்' திரைப்படம் தற்போது தள்ளிவைக்கப்பட்ட திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
'ஜனநாயகன்' படத்தின் வரவால் தியேட்டர்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும் என்பதால், இந்தத் திரைப்படம் மாற்றுத் தேதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக ஜூலை 31 அன்று வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்த லோகேஷ் கனகராஜின் 'டிசி' மற்றும் சுந்தீப் கிஷனின் 'சிக்மா' ஆகிய திரைப்படங்களும் தங்களது ரிலீஸ் தேதியை மாற்றியமைக்க ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளன.
'ஜனநாயகன்' திரைப்படத்தின் அலை தொடர்ந்து நீடிக்கும் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதே நேரத்தில், பாரி இளவழகன் இயக்கி நடிக்கும் 'அன்பே டயானா' திரைப்படம் எந்த ஒரு மாற்றமும் இன்றி, திட்டமிட்டபடி வரும் 17 அன்று திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.
இந்த திரைப்படம் விஜயின் ‘ஜனநாயகன்’ படத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்பே வெளியாவதால் எந்த ஒரு பாதிப்பும் இல்லை என்றும் கூறப்படுகிறது.