தமிழ் திரை உலகில் முன்னணி நடிகர்களான எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, விஜய்காந்த், சரத்குமார், கமல்ஹாசன் உள்பட பல நடிகர்கள் அரசியலுக்கு வந்துள்ளார்கள். ஆனால், அதில் ஒரு சிலர் மட்டுமே வெற்றி பெற்றுள்ளனர். இந்த வரிசையில் நடிகர் விஜய் தற்போது இணைந்துள்ளார். இவர் விரைவில் அரசியலுக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அவருக்கு தமிழ்நாட்டில் லட்சக்கணக்கான ரசிகர்கள் இருப்பதால் ரசிகர்களின் ஆதரவு காரணமாக அவர் அரசியலுக்கு வரலாம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், விஷாலே அரசியலுக்கு வரும்போது.. விஜய் வருவதற்கு என்ன..? என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கூறியுள்ளார்.
விஜய் -விஷால்
அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியுள்ளதாவது: ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். எல்லாரும் அரசியல் செய்யலாம். விஜய் பல படங்களில் நடித்து ஹிட் கொடுத்திருக்கிறார். அதன் பிறகு தான் அரசியலுக்கு வருவேன் என்று கூறுகிறார். ஆனால் விஷால் நான்கு, ஐந்து படங்களில் நடித்ததும் நான் தான் அடுத்த முதல்வர் என்று கட்சி ஆரம்பித்தார். ஆனால் அந்த கட்சி எங்கு போனது என்று தெரியவில்லை.
கமல்ஹாசன் கூட கட்சி ஆரம்பிக்கும் போது மக்கள் நீதி மய்யம் என்று கூறினார். ஆனால், தற்போது நீதி ,மய்யம் எல்லாம் எங்கு போனது என்று தெரியவில்லை. விஜய்யின் பல படங்கள் வெற்றி பெற்றுள்ளது. இளைஞர்களை அவர் ஈர்த்துள்ளார். அவர் அரசியலுக்கு வரலாம் என்று கூறினார்.