‘நேரம்’ படத்தின் மூலம் தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர் அல்போன்ஸ் புத்திரன். அதை தொடர்ந்து பிரேமம்' படத்தை இயக்கி இருந்தார். கடந்த 2015-ம் ஆண்டு மலையாளத்தில் மட்டுமே வெளியான பிரேமம்', தமிழ் ரசிகர்களிடையேயும் மாபெரும் வரவேற்பை பெற்றது. நிவின் பாலியின் மூன்று பரிணாமங்கள் குறித்து காட்டப்பட்ட ’பிரேமம்' படத்தில், மலர் டீச்சராக நடித்திருந்த சாய் பல்லவியின் கதாபாத்திரம் ரசிகர்களால் விரும்பி பார்க்கப்பட்டது.
‘பிரேமம்’ படம் அல்போன்ஸ் புத்திரனுக்கு மலையாள திரையுலகிலும், தமிழ் திரையுலகிலும் பெரிய பெயரை பெற்றுக்கொடுத்தது. 'பிரேமம்' படத்தின் வெற்றியை தொடர்ந்து இவரின் அடுத்த படத்திற்கு ரசிகர்கள் பெரிதும் எதிர்ப்பார்த்திருந்தனர். இந்நிலையில் கிட்டத்தட்ட 7 ஆண்டுகளுக்கு பிறகு அவருடைய அடுத்தப் படத்தின் டீஸரை வெளியிட்டுள்ளார்.
கோல்டு
'கோல்டு' எனப் பெயரிடப்பட்டுள்ள அந்தப் படத்தில் பிரித்திவி ராஜ் நாயகனாகவும், நயன்தாரா நாயகியாகவும் நடித்துள்ளனர். இப்படத்தின் கதை, திரைக்கதை, அனிமேஷன், ஸ்டன்ட் என அனைத்தையும் அல்போன்ஸ் புத்திரன் செய்து முடித்துள்ளார். இதனை அல்போன்ஸும், பிரித்திவி ராஜும் இணைந்து தயாரித்துள்ளனர். இதன் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.