மௌனம் பேசியதே, ராம், பருத்திவீரன், ஆதிபகவன் உள்ளிட்ட படங்களை இயக்கி தனக்கான இடத்தை படித்தவர் அமீர். இவர் இயக்குனராக மட்டுமல்லாமல் நடிகராகவும் தயாரிப்பாளராகவும் பயணித்து வருகிறார். சமீபத்தில் வெற்றிமாறன் இயக்கத்தில் அமீர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்த வடசென்னை திரைப்படம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
தற்போது போதைப் பொருட்களை பயன்படுத்துவதின் தீமைகள் மற்றும் ஆரோக்கியமாக வாழ்வதின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், செப்டம்பர் 17 மற்றும் 18 ஆம் தேதிகளில் மதுரை கே.எல்.என் பொறியியல் கல்லூரியில் உலக உடற்தகுதி கூட்டமைப்பு (WFF) தேசிய அளவிலான உடற்கட்டமைப்பு மற்றும் உடற்தகுதி போட்டியை இயக்குனர் அமீர் நடத்துகிறார்.
அமீர்
இது குறித்து பேசிய அமீர், மனித வாழ்வில் ஆரோக்கியம் ஒரு முக்கிய அம்சமாகும், ஆனால் மக்கள் பாரம்பரிய உணவுப் பழக்கத்திலிருந்து விலகிவிட்டனர். இதனால் முன்பு போல் மக்கள் இன்று ஆரோக்கியத்திற்கு அதிக முக்கியத்துவம் தருவதில்லை. மேற்கத்திய நாடுகளின் ஃபேஷன் மற்றும் வாழ்க்கை முறையை நாம் எவ்வாறு பின்பற்றுகிறோமோ, அதே போல் அவர்களின் உணவுப் பழக்கங்களையும் பின்பற்ற முயற்சிக்கிறோம். ஆரோக்கியமாக இருப்பது குறித்து இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது அவசியமான ஒன்றாகும். நடிகர்கள் மட்டுமே ஃபிட்டாக இருக்க வேண்டும் என்ற நம்பிக்கை பரவலாக உள்ளது, அது உண்மையல்ல.
அமீர்
சில வருடங்களுக்கு முன்பு வரை கல்லூரி தேர்வில் தேர்ச்சி பெறுவதே மாணவர்களின் இலக்காக இருந்தது. ஆனால், இப்போது போதைப் பழக்கம் இல்லாமல் கல்லூரியை விட்டு வெளியே வருவதே பெரிய சாதனையாகப் பார்க்கப்படும் நிலையில் இருக்கிறோம். இது மிகவும் ஏமாற்றமளிக்கும் மற்றும் மிகவும் ஆபத்தான போக்காகும். நமது ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். விளையாட்டு அல்லது உடற்பயிற்சிகளை செய்வதன் மூலம் போதைப்பழக்கத்தில் இருந்து நாம் விலகி இருக்கலாம் என்றார்.