தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான அஜித்தின் தந்தை சுப்பிரமணியம் நேற்று அதிகாலை உடல் நலக்குறைவால் காலமானார். சில ஆண்டுகளாக பக்கவாத பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவரது மறைவுக்கு திரையுலகினர், பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்தனர். இவரது உடல் பெசன்ட் நகர் மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
ஏ.வி.எம்.நிறுவனம் அறிக்கை
இந்நிலையில், பிரபல தயாரிப்பு நிறுவனமான ஏ.வி.எம் நிறுவனம் அஜித் தந்தை மறைவிற்கு இரங்கல் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், "அஜித் சார் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எங்கள் ஆழ்ந்த இரங்கல்கள். அவர் தன் தந்தையின் மறைவை சமாளிக்கும் வலிமையை பெற பிரார்த்திக்கிறோம். அஜித்தின் தந்தை ஆன்மா சாந்தியடையட்டும்" என்று குறிப்பிட்டுள்ளனர்.