தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு, 2019ல் நடந்த தேர்தலில் பாக்யராஜ் தலைமையில் ஒரு அணியும். நாசர் தலைமையில் விஷால், கார்த்தி உள்ளிட்டோர் சேர்ந்து மற்றொரு அணியாகவும் போட்டியிட்டனர். இத்தேர்தலை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கால், வாக்கு எண்ணிக்கை நிறுத்தி வைக்கப்பட்டது.
தேர்தலில் பதிவான வாக்குகள், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சவுத் இந்தியன் வங்கி கிளை பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டன. 'தேர்தல் செல்லாது' என்ற தீர்ப்பை எதிர்த்து நாசர், விஷால், கார்த்தி ஆகியோர் மேல்முறையீட்டு வழக்கு தொடர்ந்தனர். அதை விசாரித்த ஐகோர்ட், தேர்தல் செல்லும் என்றும், வாக்குகள் எண்ணவும் உத்தரவிட்டது.
நடிகர் சங்க தேர்தல்
அதன்படி, இன்று காலை 8 மணிக்கு நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விறுவிறுப்பாக நடந்துக் கொண்டிருந்தது. இந்நிலையில், துணைத் தலைவர் பதவிக்கான வாக்கு எண்ணிக்கை தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகளை விட கூடிதலாக 5 வாக்குச்சீட்டுகள் அதிகமாக இருப்பதாக கூறி ஐசரி கணேஷ் தரப்பு அளித்த புகாரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. துணைத் தலைவருக்கான வாக்கு எண்ணிக்கையில் விஷால் அணியின் பூச்சி முருகன் முன்னிலையில் இருந்த நிலையில் வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டுள்ளது.