தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சூர்யா, கடந்த சில படங்களில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்றாலும், அவர் மீது இருக்கும் மரியாதை, ரசிகர் கூட்டம், அன்பு என எப்போதும் குறைந்ததே இல்லை. தற்போது அவர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா 46 படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படம் அடுத்தாண்டு கோடை விடுமுறைக்கு வெளியாக இருக்கிறது.
சூர்யா ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் கருப்பு திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். அத்திரைப்படம் வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாக இருக்கிறது.
இந்நிலையில் சூர்யா 47 படத்தின் தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி சூர்யா அடுத்ததாக ஆவேஷம் படத்தின் மூலம் பெரும் வரவேற்பைப் பெற்ற ஜித்து மாதவன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இதற்கான இறுதி பேச்சு வார்த்தையும் முடிவடைந்துள்ளது. படத்தின் ப்ரீ ப்ரொடக்ஷன் பணிகள் முழு வேகத்தில் நடைப்பெற்று வருகிறது. இப்படத்தில் சூர்யா காவல் அதிகாரி கதாப்பாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த படம் மலையாளம் மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் படமாக்கப்பட உள்ளது. தயாரிப்பை கலைப்புலி எஸ். தனு (V Creations) நிறுவனம் மற்றும் சூர்யாவின் சொந்த நிறுவனம் 2D Entertainment இணைந்து மேற்கொள்கின்றன. இதுக்குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
தமிழ், தெலுங்கு, இப்போது மலையாளம்… மூன்று திசைகளிலும் தனது பயணத்தை விரிவாக்கிக் கொண்டிருக்கும் சூர்யா, ரசிகர்களிடையே மீண்டும் 'மாஸ் கம்பேக்' தரப்போகிறார் என்பதில் சந்தேகமே இல்லை! இதனால் ரசிகர்கள் மிகவும் உற்சாகத்தில் இருக்கின்றனர்.