சினிமா செய்திகள்

குழந்தைகள் குறித்து அவதூறு பரப்புவதா?- சினேகன் மனைவி கன்னிகா ஆவேசம்

இது போன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது சிவில் வழக்கு கிரிமினல் வழக்கு பதிவிடலாம். இவர்களுக்கு 2 வருடம் முதல் 5 வருடம் வரை சிறை தண்டனை கிடைக்கும்.

தமிழ் சினிமாவில் பிரபல பாடல் ஆசிரியராக இருப்பவர் கவிஞர் சினேகன். நடிகை கன்னிகாவை திருமணம் செய்து கொண்ட சினேகனுக்கு 4 வருட காத்திருப்புக்கு பிறகு இரட்டை பெண் குழந்தைகள் கடந்த ஆண்டு ஜனவரி 25-ந்தேதி பிறந்தது. குழந்தைகளுக்கு நடிகர் கமல்ஹாசன் காதல் மற்றும் கவிதை என பெயரிட்டார்.

இந்நிலையில் கன்னிகா சினேகன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விக்னராஜ் என்பவர் சினேகன், கன்னிகா ஆகியோரின் குழந்தைகள் குறித்து சில அவதூறு கருத்துக்களை பதிவிட்டு உள்ளார்.

இதைக் கண்டு கடுமையாக கோபம் அடைந்த கன்னிகா சினேகன் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது:-

என்னுடைய இன்ஸ்டாகிராமில் விக்னராஜ் என்பவர் என் ஒரு வயது குழந்தைகள் பற்றி தவறான ஒரு மெசேஜ் பதிவிட்டிருந்தார். அவர் மீது சைபர் கிரைம் போலீசில் புகார் செய்துள்ளேன். அதே சமயம் அவரது இன்ஸ்டாகிராம் ஐ.டி.யை முடக்குவதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளேன்.

இது போன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது சிவில் வழக்கு கிரிமினல் வழக்கு பதிவிடலாம். இவர்களுக்கு 2 வருடம் முதல் 5 வருடம் வரை சிறை தண்டனை கிடைக்கும். இனிமேல் போற போக்கில் சமூக வலைதளங்களிலோ, பொது இடங்களிலோ பெண்கள் மற்றும் குழந்தைகள் மீது அவதூறான கருத்துக்களை பேசி விட்டு எளிதாக தப்பித்து விட முடியாது.

நமது சட்டமும் அரசாங்கமும் பெண்களுக்கு எதிராக நடக்கிற பிரச்சனைகளுக்கு கடுமையாக குரல் கொடுக்கும் என்று நான் நம்புகிறேன். அரசியல் சார்ந்த விமர்சனம் பண்ணுவது நல்லது. அது நல்ல சொசைட்டியை உருவாக்கும். அதே சமயம் நாகரிகமாக உங்கள் விமர்சனம் இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

எல்லோருக்கும் சமூக பொறுப்புகள் இருக்கிறது. அதுபடி நாம் நடந்து கொள்ள வேண்டும். விக்னராஜுக்கும் பெண் குழந்தை இருக்கிறது. அந்த குழந்தையின் பாதுகாப்பை இவரிடம் இருந்து அவரது மனைவி பார்த்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.