இந்தியாவின் பல மொழிகளில் பிரம்மாண்டமான மற்றும் வித்தியாசமான படங்களை தயாரித்து வரும் முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் "மைத்ரி தமிழ் 03" என்ற தனது மூன்றாவது தமிழ் திரைப்படத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்தப் படத்தில் நடிகர் சூரி கதாநாயகனாக நடிக்கிறார். இந்தப் படத்தை இயக்குநர் ஆர். ரவிகுமார் இயக்க, நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவி சங்கர் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர்.
தீவிரமான களத்துடன் அதே சமயம் கண்ணைக் கவரும் வகையில் படத்தின் அறிவிப்பு போஸ்டர் வெளியாகியுள்ளது. வெள்ள நீரில் இடுப்பு வரை நின்றிருக்கும் கதாநாயகனை பின்பிருந்து காட்டும் வகையில் இந்த போஸ்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது. நீரில் பிரதிபலிக்கும் அவரது உருவம் மர்மான முறையில் அமைந்திருப்பது ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.
வலது கையில் கதாநாயகன் பிடித்திருக்கும் ஆயுதம் ஆபத்தையும் உயிர் தப்பி வாழ்வதற்கான போராட்டத்தையும் சுட்டிக்காட்டுகிறது. அவரைச் சுற்றி உடைந்த பாத்திரங்கள், சிதறிய பொருட்கள் மற்றும் கவிழ்ந்த கேஸ் சிலிண்டர் போன்றவை அழிவின் பின்னணியை உணர்த்துகின்றன. முன்புறம் கதவு வழியாக வரும் மங்கலான சிவப்பு ஒளி அச்சத்தையும் பதற்றத்தையும் அதிகரிக்கிறது.
நீரில் பிரதிபலிக்கும் உருவத்தின் மேல் இடம்பெற்றுள்ள ’BLOOD FOLLOWED THE FLOOD’ என்ற டேக்லைன், பேரழிவிற்கான வன்முறையின் தீவிரத்தை உணர்த்தும் வகையில் உள்ளது. மொத்தத்தில் இருண்ட, மர்மமான மற்றும் பதற்றம் நிறைந்த கதையைக் குறிக்கும் வகையில் போஸ்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது.
`கொட்டுக்காளி’, `விடுதலை’, `மாமன்’ உள்ளிட்ட படங்களின் வெற்றிக்கு பிறகு நடிகர் சூரி தற்போது முன்னணி கதாநாயகன் பட்டியலில் இடம்பிடித்துள்ளார். `இன்று நேற்று நாளை’ மற்றும் `அயலான்’ போன்ற வெற்றிப் படங்களைக் கொடுத்தவர் இயக்குநர் ஆர். ரவிகுமார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இதற்கு முன்பு தமிழில் அஜித் நடித்த `குட் பேட் அக்லி’ மற்றும் பிரதீப் ரங்கநாதன் நடித்த `டியூட்’ ஆகிய படங்களை தயாரித்துள்ளது.
இந்த வெற்றி கூட்டணியும், ஆர்வத்தை ஏற்படுத்தியிருக்கும் போஸ்டரும் சூரி 07 / மைத்ரி தமிழ் 03 திரைப்படம் மீது ரசிகர்களுக்கு அதீத எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. படம் குறித்த இதர தகவல்கள் விரைவில் வெளியாகும்.