சினிமா செய்திகள்

மதுரையில் தொடங்கும் சிவகார்த்திகேயனின் 'சேயோன்' இரண்டாம் கட்ட படப்பிடிப்பு!

படம் வரும் அக்டோபர் மாதத்தில் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகர் சிவகார்த்திகேயனின் பிரம்மாண்ட படமான 'சேயோன்' திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில், தற்போது அடுத்தகட்டப் படப்பிடிப்பு மதுரையில் கோலாகலமாகத் தொடங்குகிறது.

விருமாண்டி பாணி

கிராமத்துப் பின்னணியில் உருவாகும் இந்த ஆக்ஷன்-டிராமா திரைப்படத்தில், சிவகார்த்திகேயனின் கதாபாத்திரம் மக்களால் சாமியாக வழிபடப்படும் ஒரு வித்தியாசமான பாத்திரத்தில் உருவாகி வருகிறது. சிவகார்த்திகேயனின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான கிளிம்ப்ஸ் வீடியோவில், 'விருமாண்டி' படத்தின் பாணியில் கிராமத்து திருவிழா பின்னணியும், மக்களின் நம்பிக்கையும் மையக்கருவாகக் காட்டப்பட்டுள்ளது. இயக்குநர் சிவகுமார் முருகேசன், "இது இரு வேறு தெய்வங்களை நம்பும் மக்களின் வாழ்வியலையும் மனித நேயத்தையும் பேசும் கதை" எனத் தெளிவுபடுத்தியுள்ளார்.

'அமரன்' படத்தின் ரூ.300 கோடி வசூல் சாதனைக்குப் பிறகு, உலகநாயகன் கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ஆர்.மகேந்திரன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் 2-வது படம் இதுவாகும். 'தாய் கிழவி' படத்தை இயக்கிய சிவகுமார் முருகேசன் இப்படத்திற்கு திரைக்கதை எழுதி இயக்குகிறார்.

துல்கர் சல்மானின் 'காந்தா' படத்திற்குப் பிறகு, நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் தமிழில் கமிட்டாகியுள்ள 2-வது படம் இது. சந்தோஷ் நாராயணன் முதன்முறையாக RKFI - சிவகார்த்திகேயன் கூட்டணியில் இசையமைக்கிறார்.

ரிலீஸ் திட்டம்

மதுரையில் நடைபெறவுள்ள இந்த இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் முக்கியமான ஆக்ஷன் சண்டைக்காட்சிகள் மற்றும் கிராமத்துப் பகுதிகள் படமாக்கப்பட உள்ளன. படம் வரும் அக்டோபர் மாதத்தில் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.