94 வயது பிரபல திரைப்பட இயக்குநரான ஸ்ரீனிவாச ராவ் இயக்கத்தில், நாக் அஸ்வின் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘சிங் கீதம்' திரைப்படம் ஜூன் 11 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்த திரைப்படம் வழக்கமான வசன உரையாடல்களுக்கு பதிலாக, ஒரு கிராமம் முழுவதும் பாடல்கள் மற்றும் மெல்லிசைகள் மூலமாகவே முழுமையாக தொடர்பு கொள்ளும் வகையில் படமாக்கப்பட்டு உள்ளது.
படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பு, இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் முழு திரைக்கதையையும் ஒரு இசை வடிவத்திற்கு மாற்றி, ஒவ்வொரு வசனத்தையும் இயல்பான இனிமையான உரையாடலாக அமைத்தார்.
இப்படத்தில் புதுமுகங்களாக நடித்துள்ள கலைஞர்கள், தங்களின் வசனங்களைத் தாங்களே பாடுவதற்காக சிறப்பு இசை பயிற்சி பெற்றனர்.
இந்நிலையில் சிங் கீதம் படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வில் கலந்துகொண்ட நடிகர் கமல்ஹாசன் இயக்குநர் ஸ்ரீனிவாச ராவ் உடனான தனது நட்பை பகிர்ந்து கொண்டார்.
அப்போது பேசிய கமல்ஹாசன், “ஒரு திரைப்படம் உருவாக்குவது குறித்த எங்கள் முதல் சந்திப்பு ஒரு இரவு விருந்தின்போது நடந்தது. அப்போது அவர் என்னிடம் இரண்டு கதைகளைக் கூறினார்.
ஒன்று அத்வைதம், மற்றொன்று சிங் கீதம் கதை. நான் இந்தக் கதையை முதன்முதலில் எனக்கு 20 வயதாக இருந்தபோது கேட்டேன், இப்போது 71 வயதில், அது இறுதியாக வெள்ளித்திரையை எட்டுவதைக் கண்டு நான் மகிழ்ச்சியடைகிறேன்”.
இதையடுத்து புகழ்பெற்ற 'புஷ்பக விமான' (புஷ்பக்) திரைப்படத்தில் தங்களது கூட்டுப் பணி குறித்துப் பேசிய கமல், “அந்தப் படத்தில் வசனங்கள் இல்லாததாலும், நாங்கள் ஒரு நட்சத்திர ஹோட்டலில் இனிமையான சூழலில் பணியாற்றியதாலும், படப்பிடிப்பை நான் முழுமையாக ரசித்தேன்.
நாங்கள் அதை ரூ.15 லட்சத்திற்கு எடுத்தோம். கடந்த நாற்பது ஆண்டுகளில் அதன் தாக்கத்தைக் கருத்தில் கொண்டால், அது இன்று ரூ.200 கோடிக்கு இணையான வருவாயை எளிதாக ஈட்டியிருக்கும்” என்று கூறினார்.