பிரசார் பாரதியின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியான சசி சேகர் வேம்பதி, மத்திய திரைப்பட தணிக்கை வாரியத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தணிக்கை வாரியத்தின் தலைவராக இருந்த பிரசூன் ஜோஷி, பிரசார் பாரதி வாரியத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், வேம்பதிக்கு இந்தப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மத்திய அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில்,
“பிரசூன் ஜோஷி பிரசார் பாரதியின் தலைவராகப் பதவி உயர்வு பெற்றதைத் தொடர்ந்து, அவர் மத்திய திரைப்படத் தணிக்கை வாரியத்தின் தலைவர் பதவியிலிருந்து விலகியுள்ளார். இதுவே தற்போதைய இந்த நியமனத்திற்கு வழிவகுத்தது.
சசி சேகர் வேம்பதி ஊடகம், ஒளிபரப்பு மற்றும் பொதுத் தகவல் தொடர்பு துறைகளில் விரிவான அனுபவம் கொண்டவர். அவரது நியமனம் சிபிஎஃப்சி -யின் செயல்பாடுகளை மேலும் வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.” எனக் குறிப்பிட்டுள்ளது.
வேம்பதி இந்த பதவியில் மூன்று ஆண்டுகள் நீடிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சசி சேகர் வேம்பதிக்கு இந்த ஆண்டு ஜனவரியில் மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்தது குறிப்பிடத்தக்கது.