நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் இயக்குநர் சிவகுமார் முருகேசன் கூட்டணியில் உருவாகி வரும் 'சேயோன்' திரைப்படத்தில் நா.த.க. தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
மதுரையில் தொடங்கியுள்ள இதன் படப்பிடிப்பில் அவர் விரைவில் பங்கேற்க உள்ளார். முன்னதாக பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவான ‘எல்ஐகே’ படத்தில் சீமான் நடித்திருந்தார். அந்தப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
'அமரன்' படத்தின் பிரமாண்ட வெற்றியைத் தொடர்ந்து, கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் இரண்டாவது திரைப்படம் சேயோன். ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற 'தாய் கிழவி' படத்தை இயக்கிய சிவகுமார் முருகேசன் இந்தப் படத்தை இயக்குகிறார்.
மதுரை மண்ணின் பாரம்பரிய பின்னணியில் கிராமத்து கமர்ஷியல் எண்டர்டெய்னராக இப்படம் உருவாகி வருகிறது. இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். பிரபல தெலுங்கு நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் சேயோன் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்கிறார்.
கடந்த ஜூன் மாதம் இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்தது. கன்னட இயக்குநர் ராஜ் பி. ஷெட்டி இப்படத்தில் இணைந்துள்ளார். இந்த நிலையில், சேயோன் படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு திட்டமிடப்பட்டது.
இதற்காக மதுரையை சுற்றியுள்ள பகுதிகளில் மிக பிரமாண்டமான செட்கள் அமைக்கப்பட்டு, முக்கிய சண்டை காட்சி மற்றும் குடும்பக் காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
'சேயோன்' திரைப்படம் வருகிற அக்டோபர் மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் குறித்த அடுத்தடுத்த அப்டேட்கள் விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது.