நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் "கருப்பு." இந்தப் படத்தின் பணிகள் நிறைவடைந்து பலமுறை ரிலீஸ் தேதி மாற்றப்பட்டு தற்போது வருகிற மே 14-ஆம் தேதி உலகளவில் வெளியாக இருக்கிறது. இதையொட்டி இப்படத்தின் பிரீ ரிலீஸ் நிகழ்ச்சி நேற்றிரவு கேரளாவில் நடந்தது.
அதில் கலந்து கொண்டு பேசிய இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அப்போது அவர் தமிழ் நாட்டிற்கு நல்ல முதலமைச்சர் கிடைத்துவிட்டார் என்று தெரிவித்தார்.
இது குறித்து பேசிய அவர், "தமிழ்நாட்டிற்கும், கேரளாவிற்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன. எல்லாமே கிட்டத்தட்ட ஒரே மாதிரியே இருக்கும். சமீபத்தில் கூட எங்கள் மாநிலத்தில் பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்த பலர் முதலமைச்சராக முயற்சி செய்தனர். ஆனால் உங்கள் ஊரில் ஒரே கட்சியை சேர்ந்த பலர் முதலமைச்சர் ஆக முயற்சித்தனர்.
எங்களுக்கு நல்ல முதலமைச்சர் கிடைத்துவிட்டார். உங்களுக்கும் விரைவில் நல்ல முதலமைச்சர் கிடைக்க வாழ்த்துக்கள். இதுதவிர்த்து இரு மாநிலங்களிலும் இருக்கும் மற்றொரு ஒற்றுமை நடிகர் சூர்யா மீது நீங்கள் செலுத்தும் அன்பு தான்," என்றார்.