பாலிவுட் சினிமாவில் தங்கல் படத்தை இயக்கிய நிதேஷ் திவாரியின் இயக்கத்தில் 4000 கோடி ரூபாய் பட்ஜெட்டில் ‘ராமாயணா’ படம் இரண்டு பாகங்களாக உருவாகி வருகிறது.
இந்த படத்தில் ரன்பீர் கபூர் ராமராகவும், சீதையாக நடிகை சாய் பல்லவியும், ராவணன் கதாபாத்திரத்தில் நடிகர் யஷ் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர்.
ராமர் மற்றும் அவருக்கு முந்தைய தெய்வமான பரசுராமர் என இரு வேடங்களிலும் ரன்பீர் கபூர் நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் மற்றும் ஹான்ஸ் ஜிம்மர் ஆகியோரின் இசைக் கூட்டணியுடன் பிரமாண்டமாக காட்சிகள் உருவாகி வருகிறது.
இத்திரைப்படத்தின் பாகம் 1 இந்த வருடம் அக்டோபர் மாதத்தில் வெளியாகும் எனவும், பாகம் 2 அடுத்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் இப்படம் குறித்து ரன்பீரின் முந்தைய படமான ராக்ஸ்டார் படத்தை இயக்கிய இம்தியாஸ் அலி கருத்து தெரிவித்துள்ளார்.
அப்போது பேசிய அவர், “ஒரு நடிகராக ரன்பீரால் எதையும் செய்யமுடியும். அவர் வெவ்வேறு கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும், அவ்வாறு நடிக்கும்போது அவரே அந்தக் கதாபாத்திரமாக மாறிவிடுவார்.
அவர் ராமர் வேடத்தில் நடிப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. ஏனென்றால் அவரால் அந்த கதாபாத்திரத்திற்கு தாக்கத்தையும் யதார்த்தத்தையும் கொண்டுவர முடியும்.
அவர் ஒரு கதாபாத்திரத்தில் இருந்து அனைத்தையும் உள்வாங்கிக் கொள்ளும் நடிகர். அவர் ராமனிடமிருந்து சிலவற்றை எடுத்துக் கொள்வார், அது அவருக்கு மிகுந்த செழுமையைத் தரும்” என்று கூறினார்.