ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியாகி உள்ள படம் ‘கருப்பு’. படம் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்று வசூலை குவித்து வருகிறது. இந்த நிலையில் ‘கருப்பு’ படத்தின் தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ், அப்படத்தில் இடம்பெற்ற ஒரு வசனத்திற்காகப் புகழ்பெற்ற இசையமைப்பாளர் இளையராஜாவின் பெயரைப் பயன்படுத்தியதற்கு வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அறிக்கையில் கூறிருப்பதாவது:-
மதிப்பிற்குரிய இசைஞானி இளையராஜா ஐயாவிற்கு,
"கருப்பு" திரைப்படத்தில் தங்கள் பெயரைப் பயன்படுத்தி வரும் காட்சி என்பது செய்தியை கடத்தும் நோக்கத்திற்காக கையாளப்பட்ட ஒரு தற்செயல் நிகழ்வு.
50-வருடங்களுக்கும் மேலாக இசை உலகை ஆட்சி செய்யும் இசை அரசனை, காயப்படுத்தும் எண்ணமோ, களங்கப்படுத்தும் எண்ணமோ படக்குழுவிற்கு சிறிதளவும் இல்லை.
உள்நோக்கம் ஏதுமின்றி வைக்கப்பட்ட காட்சியினால், தாங்களோ, தங்களைச் சார்ந்தவர்களோ, இசை ஞானியின் ரசிகர்களோ, பிறரோ, மனம் புண்பட்டிருந்தால், அதற்கு எங்களின் தாழ்மையான வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
நாங்கள் அவரது உணர்வுகளுக்கு மதிப்பளித்து மரியாதை அளிக்கிறோம். எங்கள் மரியாதையின் வெளிப்பாடாக, திரைப்படத்தின் எதிர்காலப் பதிப்புகளிலும் அடுத்தடுத்த வெளியீடுகளிலும் சம்பந்தப்பட்ட பகுதியை நீக்கவோ அல்லது மாற்றியமைக்கவோ முடிவு செய்துள்ளோம். நாங்கள் அவரைத் தொடர்ந்து உயர்வாக மதிக்கிறோம் என்று கூறியுள்ளனர்.
பல படங்களில் வெளியிடப்பட்ட பாடல்கள் தொடர்பாக இசைஞானி இளையராஜா தொடுத்த வழக்குகள் தொடர்பாக ‘கருப்பு’ படத்தின் வசனம் இடம்பெற்றிருந்ததாக கூறப்படுகிறது.