சினிமா செய்திகள்

சட்டத்தின் முன் அனைவரும் சமமாக நடத்தப்படுவதில்லை- தீலிப் வழக்கு குறித்து பாதிக்கப்பட்ட நடிகை ஆதங்கம்

8 ஆண்டுகளுக்குப் பிறகு ஆறு குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டதற்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.2020-ம் ஆண்டிலேயே இந்த வழக்கில் ஏதோ சரியில்லை என்பதை நான் உணரத் தொடங்கினேன்.

கேரளாவில் பிரபல நடிகையை பாலியல் ரீதியாக துன்புறுத்திய சம்பவத்தில், நடிகர் திலீப் மீதான வழக்கில் எர்ணாகுளம் கோர்ட் தீர்ப்பு அளித்தது.

நடிகை பாலியல் துன்புறுத்தல் வழக்கில் நடிகர் திலீப் குற்றவாளி இல்லை என்றும் திலீப் மீதான எந்த குற்றச்சாட்டும் நிரூபிக்கப்படவில்லை என்றும் கோர்ட் தெரிவித்தது.

இந்த வழக்கில் A1 - A6 என 6 பேரும் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. திலீப் A8 என்பதால் அவரை விடுவித்து உத்தரவிட்டது.

இந்நிலையில் இந்த நாட்டில் அனைத்து குடிமக்களும் சட்டத்தின் முன் சமமாக நடத்தப்படுவதில்லை என பாதிக்கப்பட்ட நடிகை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:-

8 ஆண்டுகளுக்குப் பிறகு ஆறு குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டதற்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். எனது வலியைப் பொய் என்றும் இது பொய்யான வழக்கு என்று கூறியவர்கள் இப்போது உண்மையைப் புரிந்து கொள்வார்கள்.

முதல் குற்றவாளி எனது தனிப்பட்ட ஓட்டுநர் என்று இன்னுமே சிலர் சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். அது முற்றிலும் பொய்.. அவர் எனது ஓட்டுநர் அல்ல.எனக்குத் தெரிந்தவரும் இல்லை.

2016-ல் நான் நடித்த ஒரு படத்தில் மட்டும் எனக்கு ஏதோ ஓட்டுநராக இருந்தவர். ஆதலால் தயவுசெய்து தவறான தகவல்கள் பரப்புவதை நிறுத்துங்கள்.

2020-ம் ஆண்டிலேயே இந்த வழக்கில் ஏதோ சரியில்லை என்பதை நான் உணரத் தொடங்கினேன்.

அதனால் தான் விசாரணை நீதிமன்றத்தின் மீது எனக்கு நம்பிக்கை இல்லை என்பதாலேயே பலமுறை உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தை அணுகினேன். இருப்பினும், இந்த வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்றுவதற்கான கோரிக்கை மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்த நாட்டில் அனைத்து குடிமக்களும் சட்டத்தின் முன் சமமாக நடத்தப்படுவதில்லை. அனைத்து நீதிமன்றங்களும் ஒரே மாதிரி செயல்படுவதில்லை என உணர்ந்துள்ளேன். என் மீது அவதூறு கருத்துகளை வெளியிடுபவர்கள், வாங்கிய காசுக்கு சுதந்திரமாக பணியை தொடரட்டும் என பாதிக்கப்பட்ட நடிகை கூறினார்.