எம்.எஸ். பாஸ்கர் நாயகனாக நடித்துள்ள புதிய திரைப்படம் ‘விடியும் காத்திரு’. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
Friends Production House நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை பி.எம். ரவிச்சந்திரன் தயாரிக்கிறார். அயோத்தி வளர்மதி இணைத் தயாரிப்பாளராக பணியாற்றுகிறார். இயக்குநர்கள் பாலா மற்றும் மிஷ்கின் படங்களின் கதை விவாதங்களில் பங்காற்றிய ஆர். அரவிந்த ராஜன், தனது முதல் திரைப்படமாக ‘விடியும் காத்திரு’ படத்தை இயக்கியுள்ளார்.
எம்.எஸ். பாஸ்கர் இப்படத்தில் நாயகனாக நடித்துள்ளார். அவருடன் அம்ஜதா ஷெரின் முதன்மை பெண்கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும், காவலர் கதாபாத்திரத்தில் கோபி அயோத்தி, பேபி ஶ்ரீஜிதா, ராகேஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
சுவாரஸ்யமான க்ரைம் திரில்லர் பாணியில் உருவாகியுள்ள இப்படம், ரசிகர்களை இருக்கை நுனியில் அமர வைக்கும் வகையிலான பரபரப்பான திரைக்கதையுடன், அனைத்து தரப்பினரும் ரசிக்கும் படமாக உருவாகி வருகிறது.
ஒரு கொலை நடந்த வீட்டிற்குள் செல்லும் இரண்டு காவல் அதிகாரிகளுக்கு அங்கு நடக்கும் அமானுஷ்ய சம்பவங்களை மையமாக வைத்து இப்படத்தின் திரைக்கதை பின்னப்பட்டுள்ளது.
இந்தப் படத்திற்கு சி. சத்யா இசையமைக்கிறார். ஜி. தாமோதரன் ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்புப் பணிகளை மேற்கொள்கிறார். சண்டைக் காட்சிகளை மெட்ரோ மகேஷ் அமைக்க, ஐஸ்வர்யா நடன அமைப்பாளராக பணியாற்றுகிறார். ராஜன் வழிவிட்டான் கலை இயக்கத்தை கவனிக்கிறார்.
சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது. தற்போது இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், படத்தின் வெளியீட்டுத் தேதி விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என படக்குழு தெரிவித்துள்ளது.