கொன்றால் பாவம், மாருதிநகர் காவல்நிலையம் போன்ற படங்களை இயக்கி பிரபலமானவர் தயாள் பத்மநாபன். இவர் தற்போது, உண்மை சம்பவமான லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கை மையமாக கொண்டு அதே பெயரில் படத்தை இயக்கியுள்ளார். இதில், வெற்றி, ரங்கராஜ் பாண்டே, பிரிகிடா, லிஸ்ஸி ஆன்டனி, சரவணன், லொள்ளு சபா மாறன், இளவரசு மற்றும் கவிதா பாரதி ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படம் தமிழ் சினிமா வரலாற்றில் நடந்த உண்மைச் சம்பவத்தை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பதிவு செய்துள்ளது.
சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் படமாக்கப்பட்ட இந்தப் படம், தற்போது போஸ்ட் புரோடக்சன் பணிகளில் உள்ளது. தயாள் பத்மநாபன் இயக்கத்தில் உருவாகியுள்ள லட்சுமிகாந்தன் கொலை வழக்கு திரைப்படத்தை 2எம் சினிமாஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்த நிலையில், ‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ படத்தின் கதாபாத்திர அறிமுக வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ள அதில், வெற்றி அறிவுமதி என்ற கைதியாகவும், ரங்கராஜ் பாண்டே சிவானந்தம் என்ற சிறை அதிகாரியாகவும் அறிமுகப்படுத்தப்படுகிறார்கள். பிரிகிடா சாகா மல்லிகாவாகவும், சரவணன் சற்குணமாகவும், லொள்ளு சபா மாறன் மூர்த்தியாகவும், லிசி ஆண்டனி சூடாமணியாகவும், சுப்ரமணியம் சிவா தர்மனாகவும் நடித்துள்ளனர்.
இந்தப் படத்தில் பெரியாரிய சிந்தனையாளரான சுப. வீரபாண்டியன், கதைக்கு வலுவான சித்தாந்த ஆழத்தை சேர்க்கும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
லட்சுமிகாந்தன் கொலை வழக்கு படத்திற்கு எம்.வி. பன்னீர்செல்வம் ஒளிப்பதிவு செய்ய, தர்புகா சிவா இசையமைத்துள்ளார். விரைவில் இப்படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.