சினிமா செய்திகள்

‘கில்லர்’ படப்பிடிப்பு தள விபத்து: எஸ்.ஜே.சூர்யா ரூ.15 லட்சம் நிதியுதவி

பல ஆண்டுகளுக்கு பிறகு எஸ்.ஜே.சூர்யா இயக்கி நடித்து வரும் படம் இதுவாகும்.

நடிகர் எஸ்.ஜே. சூர்யா நடிப்பில் உருவாகி வரும் படம் ‘கில்லர்’. இப்படத்திற்கான பூஜை கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடந்த நிலையில், படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

பல ஆண்டுகளுக்கு பிறகு எஸ்.ஜே.சூர்யா இயக்கி நடித்து வரும் படம் இதுவாகும். இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

பல்வேறு இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு ‘கில்லர்’ படத்தின் படப்பிடிப்பு சென்னை ஓட்டேரி பின்னி மில் வளாகத்தில் நடைபெற்று வந்தது.

சம்பவத்தன்று அதிகாலை படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில், கேஸ் பலூன் வெடித்து தீவிபத்து ஏற்பட்டதில் மதன் என்பவர் உயிரிழந்தார்.

மேலும் இந்த விபத்தினால் ஏற்பட்ட தீயில் சிக்கி படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உயிரிழந்த மதன் என்பவர் மதுரவாயலைச் சேர்ந்தவர் என்றும் ‘கில்லர்’ படத்தில் தொழில்நுட்ப வல்லுராக பணியாற்றி வந்துள்ளார் என்றும் தெரியவந்தது.

இந்த விவகாரத்தில் இருவர் கைதாகிவுள்ள நிலையில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், ‘கில்லர்’ படப்பிடிப்பு தளத்தில் உயிரிழந்த மதன் குடும்பத்தாருக்கு ரூ.10 லட்சமும், காயமடைந்த சூர்யா என்பவருக்கு ரூ.5 லட்சமும் நிதியுதவியாக நடிகர் எஸ்.ஜே.சூர்யா சார்பாக இன்று வழங்கப்பட்டது