மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் ராஜா கருப்பசாமி இயக்கத்தில் அனிஷ்மா அனில்குமார், ரிஷிகாந்த் நடிப்பில் வெளியாகி இருக்கும் திரைப்படம் 'மொத ராத்திரி'.
இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த நிலையில், மொத ராத்திரி திரைப்படத்திற்கு இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் பாராட்டு தெரிவித்துள்ளார்.
மேலும், இந்தப் திரைப்படம் "நகைச்சுவை விருந்து" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒரே இரவில் நடக்கும் கதையாக எழுதப்பட்டு இருந்தாலும் பலரிடமும் பாராட்டுகளை பெற்றதுடன் இயக்குநரின் முதல் திரைப்படம் போன்றே தெரியவில்லை என்கிற விமர்சனத்தை இந்தப் படம் பெற்றுள்ளது.
இதுகுறித்து இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "திரையரங்குகளில் அரங்கேறும் இந்த நகைச்சுவை விருந்தை தவறவிடாதீர்கள். நகைச்சுவை மற்றும் உணர்ச்சிகள் சரியான அளவில் நிறைந்து, சிறப்பாக எழுதப்பட்டு இயக்கப்பட்ட ஒரு குடும்ப நாடகம் இது.
அறிமுக இயக்குநர் ராஜாகருப்பசாமி மற்றும் படக்குழுவினருக்கு வாழ்த்துகள். புதிய நடிகர்கள் மிகச்சிறப்பாக நடித்துள்ளனர். ரிஷிகாந்த் ஒரு அற்புதமான திறமையாளர். நான் பணியாற்றிய நடிகர்களில் எனக்கு மிகவும் பிடித்தமானவர்களில் ஒருவர்.
அவரது 'ஹீரோ' பயணம் ஒரு சிறப்பான தொடக்கத்துடன் தொடங்கி இருப்பதை பார்ப்பதில் மிக்க மகிழ்ச்சி. இன்னும் பல வெற்றிகள் வரவிருக்கின்றன," என்று குறிப்பிட்டுள்ளார்.