சினிமா செய்திகள்

ஜந்தர் மந்தர்: "இது அரசியல் சார்ந்த விஷயம் அல்ல, இது மனிதாபிமானம் சார்ந்தது" - நடிகை வரலட்சுமி கண்டனம்!

நம் சமூகம் இன்னும் எவ்வளவு பிற்போக்குத்தனமாக இருக்கிறது.

டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் கல்வி சீர்திருத்தம் கோரி அமைதியான முறையில் போராட்டம் நடத்தி வரும் நாட்டின் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட வன்முறை சம்பவங்களுக்கு நடிகை வரலட்சுமி சரத்குமார் தனது கண்டனத்தை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இது குறித்து தனது எக்ஸ் தளத்தின் பதிவில் கூறியிருப்பதாவது, 'சில நேரங்களில், நாம் நம் சொந்த வாழ்க்கையில் மூழ்கிப்போய், மேலோட்டமான தகவல்களைக் கேட்டு, பிரச்சினைகள் தானாகவே சரியாகிவிடும் என்று நினைத்துவிடுகிறோம். ஆனால், சமீபத்தில் நாம் கண்ட காட்சிகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை. பரவி வரும் காணொளிகள் மிகுந்த மனவேதனையையும் அதிர்ச்சியையும் அளிக்கின்றன.

நம் சமூகம் இன்னும் எவ்வளவு பிற்போக்குத்தனமாக இருக்கிறது என்பதை அவை காட்டுகின்றன. அமைதியான முறையில் போராடுபவர்கள் மீதான வன்முறை எந்த வகையிலும் ஏற்கத்தக்கதல்ல. நம்மைப் பாதுகாக்க வேண்டியவர்களே நமக்குத் தீங்கு விளைவித்தால், நாம் யாரிடம் செல்வது? அடுத்த தலைமுறையினருக்காகக் கல்வி முறையை மேம்படுத்த ஒரு பேச்சுவார்த்தையை மட்டுமே அவர்கள் கோருகிறார்கள். யாருமே குரல் கொடுக்காத நிலையில், தமக்காகத் தாங்களே குரல் கொடுக்கும் நம் நாட்டின் இளைஞர்களுடன் நான் துணை நிற்கிறேன்.

உயிர்கள் பறிபோவதை நாம் சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது; நடப்பவை எதுவும் சரியல்ல! நமக்கு வெவ்வேறு அரசியல் கருத்துகள் இருக்கலாம்; சில நேரங்களில் மௌனம் பலனளிக்காது, நாம் அனைவரும் குரல் கொடுக்க வேண்டிய நேரம் இது. தாமதமாகக் குரல் கொடுப்பதற்கு வருந்துகிறேன். நமக்கு வெவ்வேறு அரசியல் கருத்துகள் இருக்கலாம்; ஆனால் இது அரசியல் சார்ந்த விஷயம் அல்ல, இது மனிதாபிமானம் சார்ந்தது என்று குறிப்பிட்டுள்ளார்.