தமிழ் திரையுலகில் ஸ்டூடியோக்களுக்குள் முடங்கிக் கிடந்த சினிமாவை, கிராமங்களின் மண்வாசனை மாறாமல் வெளிப்புறப் படப்பிடிப்புகளுக்குக் கூட்டிச் சென்று புரட்சி செய்த மாபெரும் படைப்பாளி, ‘இயக்குனர் இமயம்’ பாரதிராஜா (84), முதுமை மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் காலமானார். அவரது மறைவு ஒட்டுமொத்த தமிழ் திரையுலகையும், ரசிகர்களையும் ஆழந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
பாரதிராஜாவின் மறைவுக்கு தமிழக முதல்வர், அரசியல் தலைவர்கள் மற்றும் திரை உலகினர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். அவரது இறுதிச் சடங்குகள், தேனி மாவட்டத்தில் உள்ள அவரது பண்ணை இல்லத்தில் முழு அரசு மரியாதையுடன் நடைபெறவுள்ளது. அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக, இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை தமிழகத்தில் திரைப்பட மற்றும் தொலைக்காட்சித் தொடர் படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இயக்குனர் பாரதிராஜா மறைவுக்கு, இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ் தனது எக்ஸ் பக்கத்தில், "பாரதிராஜா சார்... இந்தச் செய்தியைக் கேட்டு மிகவும் மனவேதனை அடைந்தேன். சினிமாவின் இலக்கணத்தையே மாற்றி, எத்தனையோ இயக்குனர்களுக்கு உத்வேகமாகத் திகழ்ந்த மாபெரும் ஆளுமை அவர்." தமிழ் திரையுலகில் பல நட்சத்திரங்களையும், தொழில்நுட்பக் கலைஞர்களையும் அறிமுகப்படுத்தி, பல தசாப்தங்களாகத் தமிழ் சினிமாவின் அடையாளமாகத் திகழ்ந்த 'இயக்குனர் இமயம்' பாரதிராஜாவின் மறைவு, தமிழ் கலை உலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும் என இரங்கல் தெரிவித்துள்ளார்.