இளைஞர்களின் ஃபேவரைட் ஸ்டார் ஹிப்ஹாப் தமிழா ஆதி நடிப்பிலும், இயக்கத்திலும் மற்றும் இசையிலும் உருவாகியுள்ள மாஸ் கமர்ஷியல் எண்டர்டெய்னர் திரைப்படமான 'மீசைய முறுக்கு 2' படத்தின் டிரெய்லர் அதிகாரப்பூர்வமாக வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
கடந்த 2017-ஆம் ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான 'மீசைய முறுக்கு' திரைப்படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, அதன் இரண்டாம் பாகமாக இப்படம் உருவாகியுள்ளது.
தந்தை கனவை மகன் நிறைவேற்றும் எமோஷனல் பின்னணி, இரண்டு வெவ்வேறு காலகட்டங்களின் இசைப் பயணம் மற்றும் இன்றைய தலைமுறை இளைஞர்களை தட்டியெழுப்பும் துள்ளலான மாஸ் வசனங்களுடன் இந்த டிரெய்லர் பேக் செய்யப்பட்டுள்ளது.
ஆதியின் வழக்கமான எனர்ஜி, மெகா பட்ஜெட் பிரம்மாண்டம் மற்றும் ஹிப்ஹாப் மியூசிக் என தியேட்டர் ரசிகர்களுக்கான அத்தனை அம்சங்களும் இதில் நிறைந்துள்ளதாக சினிமா விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தத் திரைப்படத்தின் கதையானது வட சென்னைப் பின்னணியில் மூன்று தலைமுறை இசைக்கலைஞர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, பாரம்பரியமிக்க கர்நாடக இசைக்கும், அடித்தட்டு மக்களின் வாழ்வியலோடு கலந்த சுயாதீன/கானா இசைக்கும் இடையே நடக்கும் ஒரு இசைப் போராட்டமாக இந்தத் திரைப்படம் இருக்கும் என்பதை டிரெய்லர் உணர்த்துகிறது.
"மியூசிக்-ன்றது எமோஷன், அதை எப்படி சார் கட்டுப்படுத்த முடியும்?" போன்ற ஆதியின் மாஸ் வசனங்கள் மற்றும் "தோத்தாலும் மீசைய முறுக்கிட்டே தோப்பேன்டா" என்ற எனர்ஜியான குரல் இளைஞர்களைக் கவரும் வகையில் அமைந்துள்ளது.
மேலும், 1980-களின் காலகட்டம் மற்றும் தற்காலம் என இரு வேறு காலக்கட்டங்களில் இந்த கதை நகர்வது கூடுதல் சுவாரசியம்.
இப்படத்தில் ஆதிக்கு ஜோடியாக கிருத்திகா சர்மா, சைத்ரா ஜே. ஆச்சார் மற்றும் ரம்யா ரங்கநாதன் என மூன்று கதாநாயகிகள் நடித்துள்ளனர்.
இவர்களுடன் முக்கிய கதாபாத்திரங்களில், யோகி பாபு, கருணாஸ், நாசர், ஆடுகளம் நரேன், ஷா ரா மற்றும் ஹர்ஷத் கான். ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
அவனி மூவிஸ் மற்றும் பென்ஸ் மீடியா பிரம்மாண்டமாகத் தயாரித்துள்ளனர். பாலாஜி சுப்பிரமணியம் ஒளிப்பதிவையும், ஃபென்னி ஆலிவர் படத்தொகுப்பையும் கையாண்டுள்ளனர்.
இப்படத்தின் உலகளாவிய தியேட்டர் ரிலீஸ் வரும் செப்டம்பர் 25 அன்று வெளியாக இருக்கிறது.
தியேட்டர்களிலேயே கச்சேரி பார்ப்பது போன்ற ஒரு பிரம்மாண்ட அனுபவத்தை ரசிகர்களுக்கு வழங்கப் போவதாக படக்குழுவினர் உறுதியளித்துள்ளனர். இப்படம் சினிமா வட்டாரத்தில் எதிர்பார்ப்பைக் கூட்டியுள்ளது.