சட்டவிரோத சூதாட்ட செயலி வழக்கு தொடர்பாக நடிகர்கள் பிரகாஷ் ராஜ், ராணா டகுபதி, விஜய் தேவரகொண்டா மற்றும் லட்சுமி மஞ்சு ஆகியோருக்கு அமலாக்கதுறை சம்மன் அனுப்பியுள்ளது.
ஜூலை 23-ம் தேதி ராணா டகுபதி, ஜூலை 30-ம் தேதி பிரகாஷ்ராஜ், ஆகஸ்ட் 6-ம் தேதி விஜய் தேவரகொண்டா, ஆகஸ்ட் 13-ம் தேதி லட்சுமி மஞ்சு ஆகியோரிடம் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஐதராபாத் காவல்துறை தாக்கல் செய்த முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில், விஜய் தேவரகொண்டா, ராணா டகுபதி, லட்சுமி மஞ்சு, பிரகாஷ் ராஜ், நிதி அகர்வால், அனன்யா நாகல்லா மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளினி ஸ்ரீமுகி உள்ளிட்ட 29 பிரபலங்கள் மீது அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்தது.
செயலியை விளம்பரப்படுத்துவதன் மூலம் பெரிய அளவிலான பரிவர்த்தனைகள் செய்யப்பட்டதா மற்றும் அது பணமோசடியுடன் தொடர்புடையதா என்பது விசாரிக்கப்பட்டு வருகிறது.
நடிகர் பிரகாஷ் ராஜ் 2016 ஆம் ஆண்டு ஜங்கிள் ரம்மி விளம்பரத்தில் தோன்றியதாகக் கூறியிருந்தார். இருப்பினும், அந்த ஒப்பந்தம் ஒரு வருடத்திற்குள் ரத்து செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார். அதன் பிறகு ரம்மி தொடர்பான எந்த தளத்தையும் தான் விளம்பரப்படுத்தவில்லை என்று பிரகாஷ் ராஜ் கூறியிருந்தார்.