சினிமா செய்திகள்

இயக்குநர்கள் பாரதிராஜா, பாக்யராஜ் நினைவு விழாவினை புறக்கணிக்கும் திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம்!

இது எங்களை மிகுந்த மரியாதையுடன் வாக்களித்து தேர்ந்தெடுத்த ஒவ்வொரு உறுப்பினரின் கௌரவத்தையும் காப்பாற்ற நாங்கள் எடுக்கும் முடிவாகக் கருதுகிறோம்.

மறைந்த இயக்குநர்கள் பாரதிராஜா மற்றும் பாக்யராஜுக்காக தென்னிந்திய நடிகர் சங்கம், இயக்குநர் சங்கம், தயாரிப்பாளர்கள் உள்ளிட்ட 4 சங்கங்கள் சார்பாக நடத்தப்படவுள்ள நினைவு விழாவை புறக்கணிப்பதாக தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக சங்கத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;

“பாரதிராஜா மற்றும் கே.பாக்யராஜ் இருவருக்கும் உங்கள் சங்கம் உள்பட ஐந்து அமைப்புகள் இணைந்து நடத்தவிருக்கும் விழா குறித்த தகவல் அறிந்ததுமே, அதாவது 26.07.2026 அன்றே இந்த விழாவில் எழுத்தாளர்கள் சங்கமும் பங்கு பெறுவது தானே சரியானதாக, முறையானதாக இருக்கும் என்கிற எங்கள் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களின் நியாயமான உணர்வை தாய்ச் சங்கத்தின் தலைவரான ஆர்.கே.செல்வமணி அவர்களை அழைத்து எங்கள் தலைவர் சேரன் போனில் பேசினார்.

அதற்கு அவர் சொன்ன சமாதானம் ஏற்றுக்கொள்ளத் தக்கதாய் இல்லை. திரைத்துறையில் முக்கியமான சங்கம் எழுத்தாளர் சங்கம்தான். எங்கள் சங்கமே அனைத்து சங்கங்களுக்கும் வேலை வாய்ப்புகளை உருவாக்கித் தருகிறது என்பது அனைவரும் அறிந்த மறுக்க முடியாத உண்மை.

கடந்த ஐந்து வருடங்களாக பாக்யராஜ் இந்தச் சங்கத்தில் தலைவராக இருந்தார். அவர் இருந்தபோதுதான் சங்கத்தின் மீது வெளிச்சம் விழுந்து திரையுலகம் கடந்து வெளியில் இருக்கும் மக்களும் கதை, எழுத்தாளர்கள் பற்றி பேசும் வண்ணம் சிறப்பாக செயல்பட்டது.

எதிர்பாராத அவரின் திடீர் மறைவுக்குப் பின் சங்கத்தில் இப்போதுதான் தேர்தல் நடந்தது. எங்கள் உறுப்பினர்கள் சேரனை அதிக வாக்குகள் அளித்து தலைவராகத் தேர்ந்தெடுத்தார்கள். பட்டுக்கோட்டை பிரபாகர், ஆர். சுந்தர்ராஜன், சமுத்திரகனி, கவிஞர் சினேகன் என பலரும் புதிய பொறுப்புக்கு வந்தோம்.

அடுத்தக் கட்டத்திற்கு சங்கம் உயர நிறைய நல்ல திட்டங்களுடன் முழு வேகத்தில் செயல்பட்டு வரும் எங்களுக்கு மன உளைச்சலையும், மிகுந்த வருத்தத்தையும் உண்டாக்கும் ஒரு சம்பவம்தான் இந்த விழாவில் எங்கள் சங்கம் அறமற்ற முறையில் புறக்கணிக்கப் பட்டிருப்பது!

நாங்களும் இந்த விழாவில் இணைந்து பங்கெடுக்க விரும்புகிறோம் என ராதிகா சரத்குமார், தமிழ்குமரன், திரு.ரத்னகுமார், சித்ரா லட்சுமணன், நாசர் என்று விழாவுடன் தொடர்புகொண்ட இத்தனைப் பேரிடமும் எங்கள் தலைவர் சேரன் போனில் பேசினார். அவர்கள் அத்தனைப் பேருமே எங்கள் உணர்வை மதித்தும், அதுவே சரியானது என்றும்தான் பேசினார்கள்.

ஐந்து அமைப்புகளுக்கும் எங்கள் ஆதங்கத்தையும், கோரிக்கையையும் தெரிவித்து கடிதம் எழுதத் தயார் நிலையில் நாங்கள் இருந்தபோது சித்ரா லட்சுமணன் கடிதம் அனுப்ப வேண்டாம் என்றும், இணக்கமாக முடிவெடுத்துவிடலாம் என்றும் நம்பிக்கை அளித்ததன் காரணமாக அன்று யாருக்கும் கடிதம் அனுப்பவில்லை. (கடிதத்தின் நகலையும் அவருக்கு அனுப்பியிருந்தோம்)

பத்திரிகையாளர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழாவில் சந்தித்தபோது எங்கள் தலைவர் ஆர்.கே.செல்வமணி அவர்களிடம் இது குறித்து நேரிலும் பேசினார்.

ஆனால் கடந்த ஒரு வாரமாக யாரிடமிருந்தும் எந்தத் தகவலும் இல்லாத சூழ்நிலையில் திடீரென்று நேற்று சித்ரா லட்சுமணன் தலைவரை ப்ரஸ் மீட்டில் கலந்துகொள்ளுமாறு அழைத்தார்.

ஆனால் எங்களது நிர்வாக உறுப்பினர்கள் அந்த அழைப்பில் எந்த முக்கியத்துவமும் இல்லை, விழாவில் நாம் என்ன செய்யப் போகிறோம், நம் பங்களிப்பென்ன என்று எதுவுமே தெரியாமல் கூட்டத்தில் ஒருவராக நாம் அமர்ந்து என்ன சொல்லப் போகிறோம்.

நம் நோக்கம் ப்ரஸ் மீட்டில் அமர்வது அல்ல விழாவில் பங்கெடுத்துச் சிறப்பிப்பது..அதற்குத்தானே அவர்கள் அழைத்துப் பேசியிருக்க வேண்டும்...இப்போது வெறும் பிரஸ் மீட்டிற்கு மட்டும் அழைப்பதில் அர்த்தமில்லை என்பதால் நாம் போக வேண்டாம் என்று முடிவு செய்தனர்.

பெப்சியுடன் உள்ளடங்கிய இயக்குனர் சங்கத்துக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கும்போது எழுத்தாளர் சங்கத்துக்கு கொடுக்க பெப்சி மறுப்பதும் அதை ஏன் குழுவில் இருக்கும் அடுத்த நான்கு சங்கங்களும் கேட்கவில்லை என்பதும் புரியாத புதிராக இருக்கிறது.

நேற்று இந்த விழா தொடர்பாக நிகழ்ந்த பத்திரிகையாளர் சந்திப்பில் ஒருவர் எங்களின் குரலாக எழுத்தாளர்கள் சங்கம் ஏன் சேர்க்கப்படவில்லை என்று கேட்ட சரியான கேள்விக்கு, “நாங்கள் அழைத்தோம், அவர்கள்தான் வரவில்லை" என்று அபாண்டமாக பழி போட்டு அப்பட்டமான தவறான பதில் சொல்லப்பட்டிருப்பது எங்களை மேலும் காயப்படுத்துகிறது என்பதையும் பதிவு செய்கிறோம்.

இயக்குநர் சங்கத்தில் பொறுப்பில் இருக்கும் நிர்வாகிகள் சிலர் எங்கள் எழுத்தாளர்கள் சங்கத்திலும் பொறுப்பில் இருக்கிறார்கள். இந்தப் பத்திரிகையாளர் சந்திப்பில் எங்கள் சங்கத்தின் சார்பாக அவர்கள் கலந்து கொள்ளவில்லை.

ஆனால் பத்திரிகையாளர்களுக்கான அறிக்கையில் ரவிமரியாவை எங்கள் சங்கத்தின் நிர்வாகியாக அடையாளப்படுத்தி இருப்பதையும் நாங்கள் மறுக்கிறோம். நடைபெறவிருக்கும் விழாவிலும் எங்கள் சங்கத்தின் நிர்வாகிகளை எழுத்தாளர்கள் சங்கத்தின் பிரதிநிதிகளாக அறிமுகம் செய்ய வேண்டாம் என்று விழாக் குழுவினரையும் கேட்டுக் கொள்கிறோம்.

பல வகையில் முறையாக முயற்சிகள் செய்தும், எங்கள் சங்கத்தின் உணர்வுகள் மதிக்கப்படாததால் எங்கள் எழுத்தாளர் சங்கம் இந்த விழாவில் கலந்து கொள்ளாமல் புறக்கணிக்கிறது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். இது எங்களை மிகுந்த மரியாதையுடன் வாக்களித்து தேர்ந்தெடுத்த ஒவ்வொரு உறுப்பினரின் கௌரவத்தையும் காப்பாற்ற நாங்கள் எடுக்கும் முடிவாகக் கருதுகிறோம்.

எதிர்காலத்தில் வரும் நிகழ்வுகளில் எங்களுக்கான நியாயமான உரிமைகளைப் புறக்கணிக்காமல் தாய்ச் சங்கம் என்கிற ஸ்தானத்திற்கான நேர்மையுடன் நடந்துகொள்ள வேண்டும் என்று பெப்சி நிர்வாகிகளையும், உண்மையான நிலையைப் புரிந்துகொள்ள வேண்டும் என்று மற்ற நான்கு அமைப்புகளின் நிர்வாகிகளையும் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

உண்மை நிலையையும், பின்னணியையும் அனைவரும் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக இந்தக் கடிதத்தின் விபரங்கள் எங்கள் சங்கத்தின் அத்தனை உறுப்பினர்களுக்கும் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு எங்கள் அறிக்கையாகவும் அனுப்பப்படுகிறது என்கிற தகவலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.