மேயாத மான் இயக்குநர் ரத்னகுமார் எழுத்து மற்றும் இயக்கத்தில் உருவாகி உள்ள காதல் திரைப்படம் 29. இப்படத்தில் விது மற்றும் ப்ரீத்தி அஸ்ரானி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
மாஸ்டர் மகேந்திரன், அவினாஷ், ஷெனாஸ் பாத்திமா மற்றும் பிரேம் குமார் ஆகியோர் பிற கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் கிரியேஷன்ஸ் மற்றும் லோகேஷ் கனகராஜின் ஜி ஸ்குவாட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளன.
இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். இப்படத்தின் டீசர், பாடல்கள் எல்லாம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இப்படம் மே.8ஆம் தேதி வெளியாக உள்ளது.
இந்நிலையில் திரைப்படத்தை அறிமுகப்படுத்தும் வகையில் 'Welcome To The World of 29' என்ற பிரத்யேக நிகழ்வு சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
இந்த நிகழ்வில் இயக்குநர்கள் பி.எஸ். வினோத் ராஜ், கார்த்திக் யோகி, பிராங்க்ளின் ஜோசப், அருண் மாதேஸ்வரன், தயாரிப்பாளர்கள் அருண் விஷ்வா, சினிஷ், ராஜசேகர் பாண்டியன், மகேஷ் ராஜ் பஸ்லியான், நடிகர் ரியோ ராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் -இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் பேசியதாவது:-
ஸ்டோன் பெஞ்ச் நிறுவனத்தை தொடங்கும் போது குறும்படங்களை எல்லாம் ஒன்றிணைத்து ஆந்தாலஜி பாணியில் ஒரு படத்தை உருவாக்கினோம். ரத்னகுமார் இயக்கிய 'மது' எனும் குறும்படமும் இடம் பிடித்தது.
அந்த குறும்படத்தை பார்க்கும் போதே ரத்னகுமாரின் எழுத்தும் இயக்கமும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அப்போதே அவரிடம் ஏதாவது திரைப்படத்திற்கான கதை இருக்கிறதா? என்று கேட்டோம்.
அப்போதுதான் நாங்கள் ஒரு திரைப்படத்தை தயாரிக்கலாம் என்று தீர்மானித்திருந்தோம். அப்போது ரத்னாவிடம் கதையை கேட்போம் என்று சொன்னேன். அவரும் இரண்டு, மூன்று ஐடியாக்களை சொன்னார். ஆனால் நான் தான் 'மது' எனும் குறும்படத்தையே முழு நீள காதல் திரைப்படமாக மாற்றித் தர முடியுமா? என்று கேட்டேன். அதுதான் மேயாதமான். அதுதான் எங்களது முதல் திரைப்படம். மேயாத மான் எங்களது முதல் படம் என்பதில் எங்களுக்கு பெருமை.
என்னைப் பொறுத்தவரை ரத்னகுமார் நல்ல எழுத்தாளர். அவருக்குள் பயங்கரமான ஹியூமர் இருக்கிறது. ஒரு விசயத்தை அவர் பார்க்கும் விதமே வேறு வகையாக இருக்கும். அதை அவர் சொல்லும் போது காமெடியாக இருக்கும்.
என்னை பொறுத்தவரை ஒரு லவ் ஸ்டோரி என்றால் அதில் யார் ஃபெர்பார்ம் செய்கிறார்கள் என்பதைதான் நான் பார்ப்பேன். ஏனெனில் ஸ்ட்ராங்கான ரைட்டிங் இருக்கும்போது.. ஆர்டிஸ்ட் நன்றாக இருந்தால் அது வெற்றி பெறும்.
அதன் பிறகு என்னுடைய ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் ரெட்ரோ ஆகிய படங்களில் நடித்த விதுவை அவர் ஆடிசன் செய்துதான் வாய்ப்பளித்தார்.
வித்தியாசமான தனித்துவமான காதல் கதை தான் ரத்ன குமாரின் 29.
லோகேஷ் கனகராஜை போல் ரத்ன குமாரும் லவ்விற்காக ஒரு யுனிவர்ஸை உருவாக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
இப்போது ஒரு திரைப்படத்தின் ரிலீஸ் என்பதும் மிகவும் கஷ்டமாக இருக்கிறது. இரண்டு பெரிய திரைப்படங்களுக்கு நடுவில் நாங்கள் வெளியிடுகிறோம். இந்த 29 திரைப்படத்தை அனைவரும் பார்த்து ரசித்து கொண்டாடும் வகையில் தான் உருவாக்கி இருக்கிறோம்.
இவ்வாறு கூறினார்.