சினிமா செய்திகள்

எல்லாமே AI-யா கோபால்?... சர்ச்சையில் சிக்கிய ரன்பீர் கபூரின் 'ராமாயணா' டீசர் - படக்குழு விளக்கம்

சீதையாக சாய் பல்லவி நடித்துள்ளார். கேஜிப் புகழ் யாஷ் ராவணனாக நடித்துள்ளார். ஏ.ஆர். ரஹ்மான் ஹான்ஸ் ஜிம்மர் இணைந்து இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளனர்.

பெரும் பொருட்செலவில் பிரமாண்டான முறையில் பாலிவுட்டில் உருவாகியுள்ள திரைப்படம் 'ராமாயணா'. நிதேஷ் திவாரி இயக்கியுள்ள இந்த படத்தில் ராமராக முன்னணி நடிகர் ரன்பீர் கபூர் நடித்துள்ளார்.

சீதையாக சாய் பல்லவி நடித்துள்ளார். கேஜிப் புகழ் யாஷ் ராவணனாக நடித்துள்ளார். மேலும் சன்னி தியோல் ரவி துபே உள்ளிட்டோரும் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஆஸ்கார் விருது வென்றவர்களான ஏ.ஆர். ரஹ்மான் ஹான்ஸ் ஜிம்மர் இணைந்து இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளனர்.

இந்த படத்தின் டீசர் அண்மையில் வெளியான நிலையில் அதில் இடம்பெற்றுள்ள கிராபிக்ஸ் காட்சிகள் விவாதப்பொருளாக மாறியுள்ளது.

அக்காட்சிகளில் இடம்பெற்றிருந்த விஷுவல் எபெக்ட்ஸின் தரம் குறித்து சாடும் இணையவாசிகள், அவற்றை கடுமையாக விமர்சித்தனர்.

அக்காட்சிகளுக்கான கிராபிக்ஸ் பணிகள் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) கருவிகளைக் கொண்டு உருவாக்கப்பட்டிருப்பதாகவும், இத்திரைப்படத்திற்காக அறிவிக்கப்பட்ட பட்ஜெட் விவரங்கள் தவறானவை என்றும் குற்றம்ச்சாட்டு எழுந்தது.

இந்நிலையில் படத்தின் தயாரிப்பாளர் நமித் மல்ஹோத்ரா தனது சமூக வலைத்தளத்தில் அளித்துள்ள விளக்கத்தில், "கடந்த சில நாட்களாக எங்களுக்குக் கிடைத்துள்ள கவனம், எங்களை மேலும் உற்சாகப்படுத்தியுள்ளது.

இது உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்களின் இதயங்களில் வீற்றிருக்கும் ஸ்ரீராமபிரானின் கதையாகும். அனைவரின் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் நாங்கள் கணக்கில் எடுத்துக்கொண்டு வருகிறோம்.

ஆயிரக்கணக்கான கலைஞர்கள் மிகுந்த அர்ப்பணிப்புடன் இத்திரைப்படத்தில் பணியாற்றி வருகின்றனர். அனைவரின் எதிர்பார்ப்புகளுக்கும் ஏற்ற வகையில், மிக உயர்ந்த தரத்திலான ஒரு திரைப்படத்தை வழங்குவதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்" என்று தெரிவித்துள்ளார்.

இத்திரைப்படத்தின் விஷுவல் எபெக்ட்ஸ் பணிகளை, நமித் மல்ஹோத்ராவுக்குச் சொந்தமானதும் ஆஸ்கார் விருது வென்றதுமான 'DNEG' நிறுவனம் கவனித்து வருகிறது.

இத்திரைப்படத்தை இந்த ஆண்டின் பிற்பகுதியில் வெளியிடுவதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.