இந்தியில் ஆதித்யா தார் இயக்கத்தில் ரன்வீர் சிங் நடிப்பில் கடந்த டிசம்பரில் வெளியாகி ரூ.1000 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்த படம் துரந்தர்.
இதன் இரண்டாம் பாகம் துரந்தர் தி ரிவெஞ்ச் கடந்த மார்ச் 19 அன்று வெளியாகி முதல் படத்தின் அளவு வரவேற்பை பெற்று வசூலை குவித்து வருகிறது.
இந்த இரு பாகங்களிலும் ரன்வீர் சிங்கிற்கு ஜோடியாக நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் இளம் நடிகை சாரா அர்ஜுன்.
சாரா அர்ஜுன் ஏற்று நடித்த கதாபாத்திரம் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது.
இதன் பிறகு சாரா எந்தக் கதாபாத்திரத்தில் நடிப்பார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.
இந்நிலையில் பாலிவுட்டின் பிரமாண்ட இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி தயாரிக்கும் படத்தில், சாரா பழம்பெரும் நடிகை மதுபாலாவின் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
டார்லிங்ஸ், பதி பத்னி அவுர் வோ ஆகிய படங்களை இயக்கிய ஜஸ்மீத் கே. ரீன் இயக்க உள்ள இப்படம் தற்போது ப்ரீ ப்ரொடக்ஷனில் உள்ளது.
இந்த ஆண்டின் இறுதியில் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
1950களில் இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கிய நடிகைகளில் ஒருவராக மதுபாலா திகழ்ந்தார். 70க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
இப்படம் நடிகை மதுபாலாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டதாக இருக்கும் என்று தெரிகிறது.
மதுபாலாவின் கதாபாத்திரத்தில் சாரா நடிக்கும்பட்சத்தில் அது அவரது திரைப்பயணத்தில் ஒரு திருப்புமுனையாக அமையும்.
மதுபாலாவின் உடை அலங்காரம், முகபாவனைகள், உடல்மொழி மற்றும் பேச்சுவழக்கு ஆகியவற்றை அப்படியே பிரதிபலிக்கும் வகையில் அவர் பயிற்சி பெற்று வருவதாக, நடிகைக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.