திருப்பூரில் நடிகர் ரஞ்சித் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
ஆன்மிகம் நிறைந்த இந்த பூமியில் கலாசாரத்தை சீர்குலைக்கும் வகையில் சமூக வலைதளங்களில் தகவல் பரப்புவது அதிகரித்துள்ளது. நீட் தேர்வு வினாத்தாள் கசிந்தது என்பது கண்டிக்கத்தக்கது. இதற்கான கோரிக்கையை மத்திய அரசு ஏற்காவிட்டால் போராட்டம் நடத்துவது நியாயமானது.
ஆனால் இந்த போராட்டங்களில் அரசியல் பேசுவது போன்றவற்றை பார்க்கும்போது அப்பாவி மாணவர்களை பலிகடாவாக்குவது போல் உள்ளது. போராட்டத்தில் அரசியல் கலக்கக்கூடாது. இதுபோன்ற போராட்டங்களுக்கு தங்கள் பிள்ளைகளை பெற்றோர் அனுப்ப வேண்டாம். முழுக்க, முழுக்க அரசியல் கலந்துவிட்டது.
இந்த விவகாரத்தில் தகுந்த நடவடிக்கை எடுத்து, வரும் காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் நடக்காமல் தடுக்கப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அதற்கு பிறகும் போராட்டம் நடத்துவது அர்த்தமற்றது.
தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள அரசு மற்றும் மக்கள் பிரதிநிதிகளுக்குச் செயல்படத் தேவையான கால அவகாசத்தை வழங்க வேண்டும்.
குறைகளை மட்டுமே சுட்டிக்காட்டாமல், அவர்களின் மக்கள் பணிகளை உற்றுநோக்க வேண்டும். சமூக ஊடகங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) மூலம் பரப்பப்படும் எதிர்மறைச் செய்திகள் மாணவர்கள் மத்தியில் தேவையற்ற பதற்றத்தையும் வன்முறை எண்ணங்களையும் தூண்டுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.