சம்பள உயர்வு மூலம், பாலிவுட்டின் முன்னணி நடிகைகளான தீபிகா படுகோன், பிரியங்கா சோப்ரா ஆகியோரின் வரிசையில் கியாரா அத்வானியும் இணைந்து, இந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் டாப் நடிகைகளில் ஒருவராகத் தன்னை நிலைநிறுத்தியுள்ளார்.
பாலிவுட் திரை உலகில் முன்னணி மற்றும் பிரபல நடிகையாக வலம் வருபவர் கியாரா அத்வானி. நடிகர் சித்தார்த் மல்கோத்ராவின் மனைவியான இவர், இன்று தனது 35-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதையொட்டி, சினிமாவில் அவர் இதுவரை வாங்கிய மற்றும் தற்போது வாங்கும் சம்பளம் குறித்த சுவாரசியமான தகவல்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றன.
சமீபத்தில், கன்னட சூப்பர் ஸ்டார் யாஷ் நடிக்கும் ‘டாக்சிக்’ திரைப்படத்தில் தபாஹி பாடலுக்கு யாசுடன் கியாரா அத்வானி நெருக்கமாக நடித்த சில காட்சிகள் வெளியாகி, சமூக வலைத்தளங்களில் கடுமையான விமர்சனங்களையும் விவாதங்களையும் சந்தித்தது. இருப்பினும், இந்தத் திரைப்படத்தின் மூலம் இந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளின் பட்டியலில் கியாரா அத்வானி முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
ஆரம்ப கால கட்டத்தில் ஒரு படத்திற்கு கியாரா அத்வானி ரூ.3 கோடி முதல் ரூ.4 கோடி வரை சம்பளம் வாங்கினார். ராம் சரணுடன் நடித்த ‘கேம் சேஞ்சர்’ படத்தில் ரூ.5 கோடி முதல் ரூ.7 கோடி வரை சம்பளம் பெற்றதாக தகவல்கள் வெளியானது. வார்-2 படத்தில் அவரது சம்பளம் மேலும் அதிகரித்தது. அடுத்ததாக அவரது திரை வாழ்க்கையில் மிகப்பெரிய சம்பளமாக ‘டாக்சிக்’ படத்தில் ரூ.15 கோடி சம்பளம் வாங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த பிரம்மாண்ட சம்பள உயர்வு மூலம், பாலிவுட்டின் முன்னணி நடிகைகளான தீபிகா படுகோன், பிரியங்கா சோப்ரா ஆகியோரின் வரிசையில் கியாரா அத்வானியும் இணைந்து, இந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் டாப் நடிகைகளில் ஒருவராகத் தன்னை நிலைநிறுத்தியுள்ளார். இவரது பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களும் திரைத்துறையினரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.