மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் முன்னாள் மேலாளர் திஷா சாலியன் மரண வழக்கில், மத்தியக் குற்றப்புலனாய்வுத் துறை முதல் தகவல் அறிக்கையை பதிவுசெய்து விசாரணையைத் தொடங்கியுள்ளது.
சிபிஐ பதிவு செய்துள்ள எஃப்ஐஆரில் சிவசேனா தலைவர் ஆதித்ய தாக்கரே மற்றும் அவரது தந்தையும், மகாராஷ்டிராவின் முன்னாள் முதலமைச்சருமான உத்தவ் தாக்கரே ஆகியோர் பெயர் இடம்பெற்றுள்ளது.
மேலும் நடிகர்கள் டீனோ மோரியா மற்றும் சூரஜ் பஞ்சோலி ஆகியோருடன் ரியா சக்ரவர்த்தி மற்றும் அவரது சகோதரர் ஷோவிக் சக்ரவர்த்தி ஆகியோர் பெயரும் இடம்பெற்றுள்ளது.
மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் முன்னாள் மேலாளரான திஷா சலியன், ஜூன் 8, 2020 அன்று மும்பை மாலாடு பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 12-வது மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்தார்.
ஜூன் 14ம் தேதி ராஜ்புத் இறந்தநிலையில் கண்டெடுக்கப்படுவதற்கு முன்பு, சலியானின் மரணம் நிகழ்ந்தது.
முன்னர் மும்பை போலீசார் இதனைத் தற்கொலை என முடித்திருந்த நிலையில், தற்போது சிபிஐ அனைத்து கோணங்களிலும் புதிய விசாரணையைத் தொடங்கியுள்ளது.