இந்தியில் ஆதித்யா தார் இயக்கத்தில் ரன்வீர் சிங் நடிப்பில் கடந்த டிசம்பரில் வெளியான துரந்தர் படம் 1000 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது.
பாகிஸ்தானில் பணியாற்றும் இந்திய உளவாளியை பற்றிய கதைக்களத்தில் இப்படம் அமைந்திருந்தது.
இதன் 2 ஆம் பாகமான துரந்தர் தி ரிவெஞ்ச் படம் கடந்த மார்ச் 19 இல் வெளியாகி முதல் படத்தை போல வரவேற்பை பெற்று வருகிறது.
படத்தின் முதல் மற்றும் இரண்டாம் பாகத்தில் மாதவன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
2 ஆம் பாகத்தில் ஒரு காட்சியில், மாதவன் கையில் சிகரெட்டுடன் சீக்கியர்களின் புனித நூலான 'குர்பானி' வசனங்களைப் படிப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தன.
இதற்கு சீக்கிய சமூகத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு, மும்பை காவல்துறையிலும் புகார் அளித்தனர்.
இந்த விவகாரம் குறித்து மனம் திறந்து பேசியுள்ள மாதவன், யாருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கம் தங்களுக்கு இல்லை என்று கூறி மன்னிப்பு கேட்டுள்ளார்.
அவர் கூறியதாவது, "அந்தக் காட்சியில் புனிதமான வசனங்களைப் பேசுவதற்கு நீண்ட நேரத்திற்கு முன்பே நான் சிகரெட்டை முழுமையாக அணைத்துவிட்டேன். இது ஒரு தவறான புரிதல் மட்டுமே.
இயக்குநர் ஆதித்யா தார் இத்தகைய விஷயங்களில் மிகுந்த கவனம் செலுத்துபவர். அந்த வசனத்தைப் பேசும்போது கையில் சிகரெட் இருக்கக்கூடாது என்றும், வாயிலிருந்து புகை வரக்கூடாது என்றும் அவர் தெளிவாகக் குறிப்பிட்டிருந்தார்.
ஒவ்வொரு படம் வெளியாவதற்கு முன்பும் நான் பொற்கோயிலுக்கு சென்று வழிபாடு நடத்துவது அனைவருக்கும் தெரியும்.
சீக்கிய மதத்தின் மீது எங்களுக்கு அளவற்ற மரியாதை உண்டு. தெரிந்தே யாருடைய உணர்வுகளையும் நாங்கள் காயப்படுத்தவில்லை" என்று தெரிவித்துள்ளார்.